புதன், 16 ஏப்ரல், 2008

இது காதல் காலம்..!

என் மன சாலை ஓரமெங்கும்
இறைந்து கிடக்கும் கனவுப்பூக்கள்
மீண்டும், மீண்டும் பொங்கி சிதறி
சீண்டி சிரிக்கும் கோடி வர்ண சிதறல்கள்

பசித்து புசித்த எனக்கு
ருசிக்க உணவிருந்தும் பசிக்கவில்லை
விழிகள் திறந்திருந்தும் உள்ளுக்குள்
வழிந்தோடும் கனவு ஜாலங்கள்
மொழி கொண்டு சொல்ல இயலாததை
விழி கொண்டு உணர்த்த துடிப்பு

தனிமை பிடிக்கிறது
இருளும் இனிக்கிறது
எழுதி நிறைக்க ஏக்கப்படும் விரல்கள்
புழுதி பறக்க மறையும் உணர்வுகள்
இலக்கை தொட்டுவிட்ட நினைப்பு
இன்னும் முழுமையடையா தவிப்பு

வாழ்க்கை வண்ணமயமாகி போனது
வசந்தத்தின் வாசம் எங்கும் நிறைந்தது

தன் மண்ணை பிரிந்த தமிழனை போல்
உன்னை காணா நொடிகள் நரகம்..!

இப்படி சிலிர்ப்பும், தவிப்பும், துடிப்பும்
இம்சையாய் மாறி.. மாறி..என்னுள்..!
என்ன நேர்ந்தது எனக்கு?

ஒரு சொல்
வாழ்வை பூக்க வைத்தது
வசந்தத்தின் வாசல் திறந்தது

"விரும்புகிறேன்" என்று நீ சொன்ன
ஒற்றை சொல்லின் வித்தையா இவை?

இது தான் காதலா..?

ஆஹா..!
இது எனக்கு காதல் காலம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக