நேரம்:

திங்கள், 14 ஜூலை, 2008

படிக்கப்போறேன்..!

கல்லு ரோட்டுல பஸ்ஸு
காத்து போல பறக்குது!
அடம் புடிக்கும் மனசு
ஆத்தா மடியில் கிடக்குது.!!

படிச்சி கலெக்டராவணும்னு
பாடுபடும் அப்பனோட ஆசை!
மடிப்பு கலையாத ட்ரெஸ்ஸோட
மகராசி என் ஆத்தாவுக்கு நான்
மனம் நெறஞ்சி வாழணுமாம்..!!

அப்பன், ஆத்தா ஆசை நிறைவேத்த்
அத்தை வீட்டில் தங்கி படிக்க
அழுதுகிட்டே போறேன்..!
விலா ஒடிக்கும் வீட்டுவேலை,
திணறடிக்கும் தீப்பெட்டி வேலை
எல்லாத்துக்கும் இனி விடுதலை..!!

பசிச்சாக்கா பாலும், பழமும்
பட்டணத்தில் கிடைக்கலாம்..!
அச்சப்பட்டு அழுவும் போது
உச்சிமோந்து வாரியணைக்க
ஆத்தா அன்பு அங்க இருக்குமா?

திங்கள், 7 ஜூலை, 2008

இதயமென்பது இயந்திரமா? அன்பில்லமா..?

நம்பிக்கையும், பகுத்தறிவும் சரிவரக் கலந்தது தான் உலக வாழ்க்கை. "இவர் தான் தன் தந்தையா..?" என்று யாரும் நிரூபணம் செய்ய விரும்புவதில்லை. நாம் அறிந்ததை நம்பிவிடுகிறோம். "இது என்ன நோய்..?" என்று அறியாது அதற்கான மருந்தை நாம் உட்கொள்வதில்லை. அதனை அறிந்த பிறகு தான் அதை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்குகிறோம். ஆக, நம்பிக்கை, பகுத்தறிவு ஆகிய இரண்டும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. ஆனால், விசித்திரம் என்னவென்றால் இந்த இரண்டும் இருவேறு துருவங்கள்.! நம்பிக்கை இருக்கும் இடத்தில் பகுத்தறிவு தோற்கும், பகுத்தறிவு இருக்கும் இடத்தில் நம்பிக்கை தோற்கும். அதே போல் தான் இதயமும்.!! விஞ்ஞானம் என்ற பகுத்தறிவு கொண்டு பார்த்தால் இதயம் என்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் ஓர் இயந்திரம். நம் நம்பிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் அன்பை இறைக்கும் கடவுளின் உறைவிடம். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இரண்டுமே உண்மை தான். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல் நம்பிக்கை, பகுத்தறிவு இரண்டும் கலந்தது தானே வாழ்க்கை..?

இதயம் ஒரு விசித்திர உறுப்பு.! சிந்தனை, செயல் உள்ளிட்ட அனைத்திற்கும் முழு முதற்பொறுப்பான மூளைக்கு கிடைக்க வேண்டிய பெயரை அதற்கு சம்பந்தமேயில்லாமல் இதயம் பெற்றிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டிருக்கும் என நான் சிந்தித்த வேளையில் எனக்கு கிடைத்த சில பதில்கள். மனிதர்களின் மேன்மையான குணம் அன்பு செலுத்துதல். அதை செய்வதில் தொடர்புடைய உறுப்பு மூளை. அந்த மூளை இருப்பதோ உச்சியில். எல்லாவற்றுக்கும் "நான் தான் காரணம் என்பதால் தான் நான் அனைத்தையும் விட உயரமான இடத்தில் இருக்கிறேன்" என்ற கர்வம் மூளைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையால் மனித சமூகம் அன்பின் அடையாளமாய் மூளையை சொல்லாமல் புறக்கணித்திருக்கலாம். காரணம், அன்பிருக்கும் இடத்தில் கர்வத்திற்கு வேலையில்லை..!!

சரி.. அப்படியென்றால்.. அன்பை சொல்ல இதயத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்..? உடம்பில் வேறு பல உறுப்புக்கள் இருக்கின்றனவே..? அதற்கும் காரணம் இருக்கிறது. இதயம் இருக்கும் இடம் உடம்பின் மையப்பகுதி. அன்பைக்கொண்டு நடுநிலையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல், அன்பு எத்தனை பெரிய தீயவனையும் நல்லவனாய் மாற்றும் சக்தியுடையது. அதே போல் தான் இதயமும் கெட்ட இரத்தத்தை சுத்திகரித்து, நல்ல இரத்தமாக மாற்றுகிறது.!! அதுவும் சரி தான்..அப்படியென்றால் இதயம் உடம்பின் மையத்தில் இல்லாமல் ஏன் இடது புறம் இருக்கிறது.? பொதுவாகவே நம் உடலில் வலது பக்க உறுப்புக்களுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. கை குலுக்குவது, சாப்பிடுவது தொடங்கி காலை எடுத்து வைத்து உள் நுழைவது வரை வலது பக்க உறுப்புகளுக்கு பெரும் முக்கியத்துவம். ஆனால், அன்பிற்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல.. அதனால் தான் யாரும் சீந்த நினைக்காத இடது புறத்தில் அன்பை உற்பத்தி செய்யும் இதயம் அமைந்துள்ளது.!!

பொதுவாக உண்மையை சொல்ல வைக்க தலையில் கை வைத்து சொன்னால் அது சத்தியம். ஆனால், இதயத்தின் மேல் கை வைத்து சொன்னால் அது மனசாட்சி..! சத்தியத்தை நிறைய மீறுகிறார்கள். ஆனால், மனசாட்சியை மீற நிறைய பேருக்கு துணிவிருக்காது. அப்படி மீறுபவர்கள் குற்றவுணர்ச்சியால் பெரும் சித்ரவதைக்குள்ளாவர்கள். மனசாட்சிக்கு பயந்து திருந்துபவர்கள் மகான் ஆகும் வாய்ப்பு கூட உண்டு. இன்றைய காலகட்டத்தில் உலக வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து உலகத்தை அமைதிப்பூங்காவாக்கும் அருமருந்து அன்பு மட்டும் தான்.!

கடவுள் அன்பின் வடிவம் என்பார்கள். அந்த அன்பை உற்பத்தி செய்யுமிடம் இதயம். ஆக, என்னை பொருத்தவரை இதயம் ஒரு கோவில்..!!

ஞாயிறு, 6 ஜூலை, 2008

தமிழர்களின் மொழிப்பற்றும், புரிதலும்..!

இரு தமிழக தமிலர்கள்(!) சந்தித்துக்கொள்ளும் பொழுது டமிங்கிலத்தில் பேசிக்கொள்வதை பல முறை கண்டிருக்கிறேன். ஆனால், இரு ஈழத்தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும் பொழுது இந்த அவலம் பெரும்பாலும் நிகழ்வதில்லை. இன்றைய காலகட்டம் வரை தமிழை இணையத்தில் வளர்த்ததில் ஈழத்தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. என்னுடைய தமிழார்வம் அதிகரித்ததற்கு இலங்கைத்தமிழர்களும் ஒரு காரணம் என்று சொல்வேன். அந்த அளவுக்கு அவர்கள் மொழிக்கு அத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழ் என்பது அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது.

அடுத்து, தமிழ் மொழி பயன்பாடு என்பதில் நாட்டுக்கு நாடு, மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. நம் பிள்ளை என்பதால் நம் பிள்ளையின் தவறுகளை ஒத்துக்கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நம் மொழியில் உள்ள குறைபாடுகளும், அதன் திருத்துவதில் அல்லது கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டாத தமிழர்களும். அந்த வகையில் தமிழை சரியாக பேசுவதில், மொழி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் முன்னால் நிற்கிறார்கள். ஆனால், இங்கே வந்திருக்கும் உச்சரிப்பு பிரச்சினை வேறு விதமானது. தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் பிற மொழியை குறிப்பாக ஆங்கில மொழியை எந்த வகையினர் சரியாக பேசுகிறார்கள் என்பது. பொதுவாக மிகச்சரியாக பேசுதல் என்பது பெரும்பாலும் அந்நிய மொழிக்கு பொருந்துவதில்லை.

ஒரு மொழியை அம்மொழியை தாய் மொழியாக கொண்டவனைக்காட்டிலும் மற்ற மொழிக்காரன் அத்தனை சரியாக பேசுவது எளிதான காரியமல்ல. அதனால் இங்கே இந்த வாக்குவாதம் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. காரணம், ஆழ்ந்து பார்த்தால் தமிழக, இலங்கை உள்ளிட்ட அனைத்து தமிழர்களிடமும் ஆங்கிலத்தை பிரயோகிப்பதில் பலவிதமான முரண்பாடுகள் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்தை உபயோகிக்கும் மற்ற மொழிக்காரர்களுக்கும் பொருந்தும். எனக்கு தெரிந்து அரேபியர்களுக்கு P உச்சரிப்பு ஆங்கிலத்தில் வருவதில்லை (B மட்டும் தான் உச்சரிப்பார்கள்). துருக்கியர்களுக்கு th(த்) என்பதை ஸ் என்று உச்சரிப்பார்கள். இப்படி நிறைய சொல்லலாம். Bottle என்ற வார்த்தையை அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் உச்சரிப்பதை சரியாக தமிழில் கொண்டு வந்து எழுதி விடமுடியும் என்றோ, அதை படித்து சரியான உச்சரிப்பை கொண்டு வந்துவிட முடியும் என்றோ நான் நம்பவில்லை.

ஒரு மொழியை சரியாக கற்க அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களை உற்று நோக்க வேண்டும். பாட்டில், போத்தல் என்பது தமிழில் அவரவர் பகுதி உச்சரிப்பிற்கேற்ப நாமாக உண்டாக்கியவையே தவிர அதற்கான ஒழுங்கான உச்சரிப்பை அந்த மொழியில், அவர்கள் உச்சரிப்பில் சொல்லும் போது மட்டுமே சரி..!! நாம் பாட்டில் அல்லது போத்தல் என்பதற்கு பதிலாக நம் மொழியில் குப்பி அல்லது குடுவை என்று சொல்வது சிறப்பு. சரி.. இப்படி எல்லாவற்றையும் நாம் பேசலாமா..? முடியாது... காரணம் நிறைய பொருட்களுக்கு, செயல்களுக்கு இன்று வரை சரியான தமிழ்ப்பதம் இல்லை. அல்லது அப்படி தமிழ்ப்பதம் இருந்து சொன்னால் புரிவதில் குழப்பம் தான் பெரும்பாலும் ஏற்படும். மொழியை வளர்க்கிறேன் என்ற பெயரில் சிலர் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். மொழியை வளர்ப்பதை விட அந்த மொழியால் நமக்குள் புரிவதில் குழப்பம் ஏற்படக்கூடாது அவசியம் என நான் நினைக்கின்றேன்.

இன்று வரை வழக்கில் மிதிவண்டி, பேருந்து என சொல்வதில்லை. சைக்கிள், பஸ் தான். ஆங்கிலம் அளவுக்கு தமிழ் அத்தனை மொழி வளம் இல்லாததும், கற்க சிரமமானதும், அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளதும் தமிழின் பெரும் பலவீனம். இந்த பலவீனம் எதுவும் இல்லாதது ஆங்கிலத்தின் பெரும் பலம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைப்பவற்றிற்கான புதுப்புது பதங்களை உடனுக்குடன் ஆங்கிலத்தில் உண்டாக்கி அகராதியில் சேர்க்கிறார்கள். ஆனால், அதை நாம் பெரும்பாலும் செய்வதில்லை. தமிழை மட்டும் பேசி ஒரு முழுமையான புரிதலையுடைய சமுதாயத்தை நாம் காண முடியாது என்பதை உறுதி செய்ய இரு வேறு தமிழர்கள் ஒரே பொருளின் பெயரை இரு வகையில் உச்சரித்து இருவரும் "தான்" சொல்வது தான் சரி என்பதை கொண்டு புரிந்து கொள்ளலாம்..!! ஆனால், உண்மை இருவர் சொல்வதும் தவறு என்பது என் கருத்து.

இது போன்ற குழப்பத்தை மொழி தீர்க்க முடியாது. ஒருத்தொருக்கொருத்தர் இடையேயான புரிதலும், அறிதலும் மட்டுமே தீர்க்கும்..!!

Related Posts with Thumbnails