நேரம்:

வெள்ளி, 15 ஜனவரி, 2010

நம்ப ”முடி”யவில்லை..!!




நண்பர்களே..!

இனி நீங்கள் யாரிடமாவது கோபப்பட்டால் எதிராளியை “நீ என் முடிக்கு சமம்..!” என்று வார்த்தையை விட்டு விடாதீர்கள். அது எவ்வளவு பெரிய தவறு என்பது இந்த பதிவை படித்தால் உங்களுக்கு புரியும்.

தலையின் வழுக்கையை மறைக்க உபயோகிக்கும் விக் பெரும்பாலும் மனிதர்களின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட உண்மையான முடியைக் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. செயற்கையாக தயாரிக்கப்படும் “விக்”குகளுக்கு மக்களிடையே அவ்வளவாக வரவேற்பு கிடையாது. உலகத்திலேயே விக் தயாரிப்பில் சீனாவுக்குத்தான் முதலிடம். அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. ஐரோப்பா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு மூன்றாவது இடம்.

விக் தயாரிப்பு இன்று ஒரு லாபகரமான தொழில். இந்தியாவில் இருந்து வருடம் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய்க்கு தலைமுடி ஏற்றுமதி செய்யப்படுகிறது (ஆண்டவா..!) இந்தியர்களின் முடி கருப்பாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதால்  அதை வாங்க வெளிநாடுகளுக்கிடையே போட்டியும், வரவேற்பும் அதிகம் (முடி விஷயத்தில் மட்டும் தான் என்று நினைக்கிறேன்..!). இந்தியாவில் முடி சேகரிக்கும் தொழில் ஒரு லாபமான குடிசைத் தொழிலாகவே வளர்ந்து விட்டது. தலை சீவும்போது சீப்பு மூலம் உதிர்ந்து வரும் முடி குப்பைக்குப் போகிறது. இந்த குப்பையிலிருந்து முடிகளைச் சேகரிக்க கூட ஆட்கள் உண்டு. இவ்வாறு சீப்பு மூலம் கழியும் முடி மட்டும் வருடத்திற்கு 4 யிரம் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருக்கும் கோயில்களிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 500 டன் முடி கிடைக்கிறது.

உலகத்திலேயே பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையான் கோவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 300 டன் முடி கிடைக்கிறது. நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒரு கிலோ முடி எட்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. (இனி பார்பரிடம் முடி வெட்டி விட்டு வரும் போது செலவுக்கு அவரிடமே பணமும் கேட்க வேண்டியது தான்..!). 6 பெண்களை மொட்டை அடித்தால் ஒரு கிலோ முடி கிடைக்கிறது (பெண்ணின் தலையைத்தான் சொன்னேனே தவிர பெண்ணுடைய  தந்தையின் தலையை அல்ல..!). முடியின் மதிப்பை வைத்தே தலை முடிக்கு கருப்புத் தங்கம் என்ற பெயரும் உண்டு.

இன்னும் ஒரு இனிப்பான ரகசியம் ரகசிய சொல்லட்டுமா..? சாக்லெட் தயாரிப்பதற்கு முடி மிகவும் அவசியம்..! முகம் சுளிக்காதீர்கள். சாக்லெட் தயாரிப்பதற்கு உபயோகப்படும் ஒரு வித ரசாயனம் முடியை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் கொண்டு வரும் போது கிடைக்கிறது.

ஒரு எச்சரிக்கை: நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒரு கிலோ முடி எட்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 6 பெண்களை மொட்டை அடித்தால் ஒரு கிலோ முடி கிடைக்கிறது என்பதன் மூலம் கையில் செலவுக்கு பணம் இல்லை என்றால் எத்தனை பேரை பிடிக்க வேண்டும், அதில் எத்தனை பேருக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று தெரிந்து விட்டது. ஆனால் ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு இந்த தகவல் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “நாம் தினம், தினம் கோடிக்கணக்கான பேருக்கு மொட்டை அடிக்கிறோம், ஆனால் அதற்கேற்ற பைசா வருவதில்லையே..?!” என்ற சிந்தனையில் அவர்கள் இருக்கிறார்களாம். இந்த விஷயம் தெரிந்தால் பிறகு நமக்கு திண்டாட்டம்தான்..!!

இதெல்லாம் படிச்சிட்டு ”என்னால ”முடி”யலை...!!”ன்னு தானே சொல்றீங்க..?!! ஆவ்வ்வ்வ்வ்..!!!!





(பிடிச்சி) இருந்தாக்கா (ஓட்டு) அள்ளிக்கொடுங்க , இல்லாட்டி (பின்னூட்டத்தில்) சொல்லிக்கொடுங்க..!! 

 

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails