நேரம்:

திங்கள், 5 அக்டோபர், 2009

உன்னைப்போல் ஒருவன் - விமர்சனம்

தீவிரவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் தீவிரவாதிகளோ அல்லது அந்த தீவிரவாதத்திற்கு காரணமானவர்களோ அல்ல. இவை எதிலும் சம்பந்தமில்லாத அப்பாவி பொதுமக்கள் தான். அப்படிப்பட்ட பொதுமக்களுக்கு தீங்கு விளைப்பவர்களை அவசியம் தண்டிக்க வேண்டும். இது தான் உனக்குள் ஒருவன் படத்தின் கரு. “எ வெட்னஸ் டே” என்ற இந்திப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட உனக்குள் ஒருவன் கதைக்கரு தேசபக்தியின் அடிப்படையில் வரவேற்கப்படவேண்டியது தான் என்றாலும் அதை கொ(எ)டுத்த வகையில் சம்பந்தப்பட்டவர்கள் தோல்வி அடைந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. இப்படத்தின் அடிப்படை நோக்கமான தீவிரவாத எதிர்ப்பு என்ற நிலையை கடந்து ஒரு சமூகத்தின் மீதான வெறுப்பை தான் இப்படம் ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு படைப்பு மனிதத்தை மிகவும் நேசிக்கும் கமல் என்ற அற்புதமான படைப்பாளியிடமிருந்து வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

படத்தின் விரிவான கதை என்ன என்பதை ஏற்கனவே வலைப்பதிவில் பதிவர்கள் அலசி, துவைத்து காயப்போட்டுவிட்டார்கள் என்பதால் என் விமர்சனத்திற்கு போகிறேன்.

இந்த படத்தின் மூலமான எ வெட்னஸ் டே-யில் கமல் நடித்த பாத்திரத்தில் நஸ்ருத்தீன் ஷாவும், மோகன் லால் நடித்த பாத்திரத்தில் அனுபம் கெர்-ம் நடித்திருக்கிறார்கள். நஸ்ருத்தீன் ஷாவின் நடிப்பு பற்றி அவரை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். ஒரு பேட்டியில் கூட நஸ்ருத்தீன் ஷா செய்ததில் சிறு பங்கை கூட என்னால் செய்ய முடியாது என்று கமல் சொன்னதாக ஞாபகம். அந்த வகையில் கதையை தாண்டி, அந்த அருமையான கலைஞர்களால் எ வெட்னஸ் டே படம் வைரமாக மிளிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதன் தழுவலான உனக்குள் ஒருவன் படத்தின் பாத்திரப்படைப்புகள் மற்றும் படம் வெளிப்படுத்தும் தனிப்பட்ட சமூகத்தின் மேலான வெறுப்பு ஆகியவற்றால் படமே அரைவேக்காடாக ஆனதாக தான் உணர்கிறேன். அது மட்டுமல்லாமல் மததுவேஷம் தாண்டி இப்படத்தில் நிறைய குறைகளை என்னால் சுட்டிக்காட்ட முடியும். என்னதான் ஆழ்ந்து சிந்தித்து, சமூக நலனில் அக்கறை கொண்டு படம் எடுத்தாலும் தமிழ் சினிமாவின் இலக்கணங்களாக சில விஷயங்கள் இருந்து அந்த படத்தின் தரத்தை தாழ்த்தும். பொதுவாக கமல் படங்களில் அவர் நடிகராக மட்டும் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி பல துறைகளிலும் அவரின் குறுக்கீடு இருக்கும் என்பதை பலர் அறிவார்கள். அந்த வகையில் இந்த படத்தில் அவரின் குறுக்கீடுகள் இல்லாதது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும் கமல் என்ற நடிகனின் ஆளுமை, லாஜிக் மீறல்கள் படத்தின் பல இடங்களில் அப்பட்டமாக தெரிந்து படத்தின் இயல்பை கெடுக்கிறது. உதாரணத்திற்கு சில...

1. கதைப்படி கமல் ஒரு காமன் மேன். அதாவது சராசரியான, நடுத்தர குடும்பத்து மனிதர். ஆனால் அவரின் படித்த, பணக்கார தோற்றம் நிச்சயம் ஒரு நடுத்தர வர்க்க மனிதனை நினைவு படுத்தவில்லை. அதுவும் அவர் பேசும் அமெரிக்க ஆங்கிலமும், நவீன தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு அவர் பிறருடன் செய்யும் தகவல் தொடர்பும் அவரை ஒரு கம்ப்யூட்டர் துறை வல்லுநராகத்தான் காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர் பயன்படுத்தும் உயர்வகை தகவல் தொடர்பு சாதனங்களும், அதை கடைசி காட்சியில் கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென தீவைத்து விட்டு செல்வதும் அவரின் காமன் மேன் என்ற பாத்திரப்படைப்பை முழுமையாக சிதைக்கிறது. இதைத்தான் கமலின் ஆளுமை என்றேன்.

2. பாத்திரப்படைப்பில் தவறு என்றில்லாமல் காட்சிகளிலும் லாஜிக் மீறல்கள் உண்டு. உதாரணத்திற்கு படத்தின் ஆரம்பத்தில் ரயில், பஸ், ஷாப்பிங் மால், கமிஷனர் ஆஃபீஸ் ஆகிய இடங்களில் குண்டு வைப்பார். அதாவது ஒரு பேக்கை வைத்துவிட்டு வருவார். கடைசியில் கமிஷனர் ஆஃபிஸில் வைத்தது மட்டுமே வெடிகுண்டு என்பார். பிறகு எதற்காக மற்ற இடங்களில் குண்டு வைப்பதை போல் பையை வைத்துவிட்டு வருகிறார்? வெறுமனே அந்த இடங்களில் குண்டு வைத்திருப்பதாக அவர் பொய் சொன்னால் போதுமே..! இது படம் பார்க்கும் இரசிகனை அவர் உண்மையில் குண்டு வைப்பதாக நம்பவைக்க செய்யப்பட்ட யுக்தியாக இருந்தாலும் கதையோட்டத்தில் அந்த காட்சி தேவையில்லை என்பதால் லாஜிக் இடிக்கிறது.

3. மிகப்பெரிய பணக்காரர்களுக்கு, செல்வாக்கு நிறைந்தவர்களுக்கு கூட கிடைக்காத ஆர்டிஎக்ஸ், ஒரு காமன் மேனுக்கு 6 கிலோ எளிதாக கிடைக்கிறது. எப்படி என்று தெரியவில்லை. அவர் மொட்டைமாடியில் இருந்தபடி கமிஷனரிடம் பேசுவதும், டிவி சேனலுக்கு பேசுவதும் சரி தான். ஆனால், தீவிரவாதிகளை ஏற்றிச்செல்லுவதற்காக என்று வெடிகுண்டு வைத்த ஜீப் அங்கே எப்படி வருகிறது..? தனி மனிதனாக மொட்டைமாடியில் இருந்தபடி கமலால் எப்படி செய்ய முடியும்.? இதையெல்லாம் பார்த்தால் தீவிரவாதிகளை விட பெரிய நெட்வொர்க் கமலுடையது போல் தோன்றுகிறது.!!

4. கமல் மொத்தம் வாங்கியது 6 கிலோ ஆர்டிஎக்ஸ். அதில் ஒரு இடத்தில் அதாவது கமிஷனர் ஆஃபிஸில் வைக்க பயன்படுத்தியது 3 மூன்று கிலோ. மற்ற இடங்களில் வெடிகுண்டு வைக்கவில்லை என்கிறார். அப்படி என்றால் மீதி 3 கிலோ என்னவாயிற்று.? ஒரு வேளை நல்ல விலைக்கு யாரிடமாவது விற்றுவிட்டாரா அல்லது மீண்டும் ஒரு இடத்தில் வைப்பதற்காக ஸ்டாக் வைத்துவிட்டாரா..?

5.பொதுவாகவே மன விரக்தியில் உயிரை வெறுத்து செயல்படுபவர்கள் தான் தீவிரவாதிகள். அவர்கள் உயிர் பயம் என்பது இருக்கவே இருக்காது. அதனால் தான் தீவிரவாதிகளில் அதிகம் தற்கொலைப்படை தாக்குதல் இருக்கும். அதே போல் அவர்களின் நோக்கம் ஒன்று என்பதால் அவர்களுக்குள் புரிதல், ஒற்றுமை அதிகம் இருக்கும். ஆனால் தீவிரவாதிகளை கோழை போலவும், துரோகிகள் போலவும் காட்டுகிறார்கள். தீவிரவாதியின் கண்களில் மரண பயம் தெரிவதாக போலீஸ் அதிகாரி ஆரிஃப் சொல்வார். அதே போல் ஒருவனை பிடித்து வைத்துக்கொண்டவுடன் மற்றவர்கள் தப்பித்தால் போதும் என்று ஓடுவதாக காட்டப்படுகிறது.

கமல் ஒரு அருமையான கலைஞன் என்பதில் யாதொரு சந்தேகமில்லை. கதையே இல்லாமல் அவர் எடுத்த தசாவதாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது கூட அவரின் நடிப்பின் மீதான அர்ப்பணிப்பிற்காகவே அவரை புகழ்ந்தவன் நான் (அதை என் வலைப்பதிவிலேயே நீங்கள் படிக்கலாம்). அப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் மதநல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இந்த படத்தை எடுத்தது துரதிருஷ்டமே.! இந்த படத்தில் கமல் சொல்லி இருக்கும் ஒன் லைன் மெஸேஜ் தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் தான் பதிலாக இருக்க வேண்டும் என்பது தான். சமூகம் என்ற எல்லைக்கோட்டுக்குள் அதை மதித்து வாழும் ஒரு மனிதம் நிறைந்த மனிதன் இந்த கருத்துக்குள் நிச்சயம் உடன்படமாட்டான். காரணம், கமல் என்ன கருத்தை இந்த படத்தில் சொல்ல முயன்றாரோ அதை செயலாக்க முயற்சித்ததால் தான் அவர்கள் தீவிரவாதிகளாக மாறிவிடுகிறார்கள். தீவிரவாதிகள் யாரும் திருடி, கொள்ளையடித்து, கொலை செய்து தீவிரவாதிகளாக ஆவதில்லை. அவர்கள் மீது அரசு, குறிப்பிட்ட சமூகம் ஏவும் வன்முறையால் பாதிக்கப்பட்டு அதை எதிர்க்க முடியாத இயலாமையின் காரணத்தால் விரக்தியில் தள்ளப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். தீவிரவாதம் என்பது எந்த உருவத்தில் இருந்தாலும், யாரால் செய்யப்பட்டாலும் தடுக்கப்பட வேண்டியது. ஆனால், அதை ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் செய்வதாக சேற்றை வாரியடிப்பதும், அந்த தீவிரவாதத்திற்கான அடிப்படை காரணத்தை அறியாமல் இருப்பதும் கமலின் நடுநிலைத்தன்மையின் மேல் அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது. கமலின் பெயரில் இருக்கும் ஹாசன் என்ற இஸ்லாமிய பெயர் அவரின் குடும்ப நண்பரான ஒரு இஸ்லாமியருக்கு உரியது. அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் குடும்பமே (கமல்ஹாசன், சாருஹாசன், சந்திரஹாசன், அனுஹாசன், ஸ்ருதி ஹாசன்) ஹாசனை பெயரோடு வைத்துள்ளது. அந்த அளவுக்கு இஸ்லாமிய சமூகத்தை புரிந்தவருக்கு இடையில் என்ன நேர்ந்தது..?

இப்படத்தின் மூலமான இந்தியில் தீவிரவாதிகள் 4 பேரும் முஸ்லீம்களாக காட்டி இருப்பார்கள். ஆனால் இதில் 3-க்கு 1 என்ற விகிதத்தில் ஒரு ஹிந்துவை தீவிரவாதியாக்கி சிறுபான்மை நலன் பேணியிருக்கிறார் கமல். இதில் பெரிய காமெடி என்னவென்றால் மற்றவர்களால் பாதிக்கப்பட்டு தீவிரவாதிகளாக மாறிய முஸ்லீம்கள் மேல் வெறுப்பை உமிழ்ந்திருக்கும் கமல், யாராலும் பாதிக்கப்படாமல் தன் சுயநலத்திற்காக ஆயுதம் விற்கும் ஹிந்து தீவிரவாதியின் மேல் பரிதாபத்தையும் ஏற்படுத்தும் வகையில் பாத்திரத்தை படைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் படம் நெடுக இஸ்லாமிய சமூகத்தின் மேல் கறை ஏற்படுத்த பல காட்சிகளில் முயன்றிருக்கிறார்கள். இந்த படத்தின் கதையோட்டத்திற்கு நகைச்சுவை அவசியமில்லாதது. ஆனாலும் தேவையில்லாமல் எம்.எஸ்.பாஸ்கரை வைத்து ஒரு காட்சியில் கிச்சுகிச்சு மூட்ட முயன்றிருக்கிறார்கள். ஆரம்பத்தின் கதையின் சரியான வடிவம் புரியாத நேரத்தில் இந்த காட்சி வருவதால் கொஞ்சம் சிரிப்பு வருகிறது. ஆனால் கதையின் போக்கு புரிந்து பார்வையாளன் இறுக்கமாக இருக்கும் நிலையில் நகைச்சுவை என்ற பெயரில் இஸ்லாமிய சமூகத்தை கொச்சைப்படுத்தும் மலிவான வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ஒரு காட்சியில் கமல் சொன்ன இடத்தில் தீவிரவாதிகளை ஒப்படைக்க போலீஸ் அவர்களை அழைத்து செல்வார்கள். அப்போது நடக்கும் காட்சி மற்றும் வசனம் கீழே..

1. ”எனக்கு 3 மனைவிகள்” என்ற வசனத்தின் மூலம் முஸ்லீம்கள் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பார்கள் என்ற தோற்றத்தை உண்டாக்க முயல்கிறார்களே அது ஏன்..?. இந்தியாவிலுள்ள மதங்களின் சதவீதத்தில் பலதார திருமணம் செய்த இஸ்லாமியர்களின் சதவீதம் அதிகமென்று யாராலும் நிரூபிக்க முடியுமா..?)

2. ”3-வது மனைவிக்கு 18 வயசு. ரொம்ப அழகானவ. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்” இந்த வசனத்தின் மூலம் 40 வயதுக்கு மேல் உள்ள தீவிரவாதி 18 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கிறான் என்பதன் மூலம் அவர்கள் திருமணத்திற்கு வயது பொருத்தம் பார்ப்பது கிடையாது என்றும், மனைவியாக இருந்தாலும் கூட அவர்களின் அன்பு அழகை அடிப்படையாக வைத்து தான் இருக்கும் தோற்றம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

3. ஒரு முஸ்லீம் தீவிரவாதி பெஸ்ட் பேக்கரியில் தன் 3-வது மனைவிக்கு நடந்த கொடுமையை சொல்லி, அவளை கொலை செய்து விட்டார்கள் என்று புலம்புவான். அப்போது ஹிந்து தீவிரவாதியான சந்தானபாரதி “ஒண்ணு போனா என்ன.? பாக்கி ரெண்டு இருக்குல்ல..அதை வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்க..!” என்று சொல்வார். இதை கேட்டு நகைச்சுவை என்று சிரிப்பவர்கள் நிச்சயம் மனிதாபிமானம் உள்ளவர்களாக இருக்க முடியாது.

4. ஆரீஃப் என்ற முஸ்லீம் போலீஸ் அதிகாரி தன் கடமையில் தவறாமல் இருந்தாலும் கூட உயர் அதிகாரி மோகன் லால் ஆரீஃபை பற்றி அவரின் சக அதிகாரியிடம் “அவன் மேல் ஒரு கண்ணு வச்சிக்க” என்று சொல்வது அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் முஸ்லீம்களின் மீதான ஒட்டுமொத்த அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

5. தீவிரவாதிகளை கமலிடம் ஒப்படைக்க அனுப்பிய பிறகு, கமல் கமிஷனர் மோகன்லாலிடம் பேசும் போது யாரை கூட தீவிரவாதிகளை அனுப்பினீங்க..? என்று கேட்பார். அதற்கு மோகன்லால் ஆரீஃப் என்ற பெயரை சொன்னதும் பெரும் யோசனையில் விழுந்து விட்டு, பிறகு பெருமூச்சுடன் அந்த யோசனையில் இருந்து வெளியே வருவார். இந்த காட்சியின் உள்ளிருக்கும் அர்த்தத்தை விபரமானவர்கள் அறிவார்கள்.

6. தீவிரவாதிகள் பேசும் தமிழ் வழக்கு தமிழ்நாட்டைச்சேர்ந்தவன் போல் இல்லை. பெரும்பாலான படங்களில் முஸ்லீம்கள் என்றாலே தமிழ் அரைகுறையாகவும், உருதுவை கலந்து பேசுபவர்களாகவும் காட்டுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா..? அவர்களெல்லாம் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா..?

இந்த படத்தின் டைரக்டர் சக்ரி டோலட்டி . இவர் கமலின் நெருங்கிய நண்பர். தசாவதாரம் படத்தில் விஞ்ஞானி கமல் கோவிந்தின் நண்பராக கண்ணாடியுடன் நடித்தவர். இப்படத்தில் மததுவேஷ காட்சிகள், கருத்துக்கள், லாஜிக் இடறல்கள் தாண்டி பாராட்டத்தக்க விஷயங்கள் இப்படத்தில் இல்லாமல் இல்லை. ஓரிரு நாட்களில் நடக்கும் கதையை விறுவிறுப்பாக கொடுத்ததற்கும், தமிழ் சினிமா இலக்கணங்களான குத்துப்பாட்டு, பஞ்ச் வசனம், பறக்கும் சண்டைகள், வெளிநாட்டு லொக்கேஷனில் பாட்டு என்று எதையும் வைக்காமல் எடுத்ததற்காக இப்பட இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும். நடிப்பில் கமலை பாராட்டுவதென்பது அவசியமற்றது என்றாலும் ஒரே கதைக்களத்தில் இருந்தபடி அவர் பேசும் வசனங்களின் ஏற்ற இறக்கம், உடல் மொழி அசர வைக்கிறது. யாரோ ஒரு சகோதரி மீதான வன்முறையை சொல்லி கலங்கும் போது நம்மையும் சேர்த்து கலங்க வைக்கிறார்.

மலையாளி போலீஸ் கமிஷனராக நடித்துள்ள மோகன்லால் இயல்பாக நடித்து பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். சில இடங்களில் நடிப்பில் கமலை மிஞ்சுகிறார். கமிஷனருக்கும், உள்துறை செயலாளர் லட்சுமிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் மற்றும் உரையாடல்கள் சுவராஸிய இரகம். மோகன்லால் கீழே பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளாக வரும் பரத் ரெட்டி, கணேஷ் இருவரும் நல்ல தேர்வு. இந்த படம் மூலம் கமலின் புத்திரி ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி உள்ளார். பெரிதாக சொல்ல முடியாது என்றாலும் ஒரு அறிமுக இசையமைப்பாளர் மீதான எதிர்பார்ப்பை ஈடுகட்டியுள்ளார். ஸ்ருதிக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என்று நம்பலாம். அதே போல் திரைப்படத்தின் நீளமும் குறைவு என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம். இப்படத்தின் கதைக்களமும் 4, 5 இடங்களுக்குள்ளேயே நடந்தாலும் நமக்கு அலுப்பூட்டவில்லை. கதையை காட்சிகள் மூலம் வடிவமைத்ததில் தவறுகள் உண்டு என்று சொன்னாலும் அதன் உள்நோக்கமான தேசபக்திக்காக இயக்குநர் மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் ராயல் சல்யூட். இது தேசத்தின் மேல் அக்கறை கொண்ட ஒவ்வொரு இந்தியனின் கடமை.

மொத்தத்தில் உன்னைப்போல் ஒருவன் உண்மையை உணராதவன்.!!


மதிப்பெண்: 41/100

புதன், 25 பிப்ரவரி, 2009

ஆஸ்கார் நாயகன் அல்லாஹ் ரக்கா (ஏ.ஆர்.) ரஹ்மான்..!

இந்திய திரையுலகின் கனவான ஆஸ்கார் விருது நனவாகியிருக்கிறது. ஸ்லம்டாக் மில்லியனர் என்ற இந்தியப்படத்திற்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை தட்டிச்சென்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மானுக்கும், விருது வென்ற மற்ற கலைஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்..!

ரஹ்மானின் சாதனையை புகழும் வகையில் அவருடைய சுருக்கமான சுய சரிதம் தமிழில் கீழே:

கேரளத்தில் மெல்லிசைக்குழுகக்ளுக்கு 'கானமேளா' குழுக்கள் என்று பெயர். மலையாள மெல்லிசைக்குழுக்களுக்குப் பொதுவான தனிச்சிறப்பு உண்டு. அவர்கள் பாடுவதில் கணிசமான பாடல்கள் இந்தி, தமிழ் பாடல்களாகவும் பழைய மலையாள பாடல்களாகவும் இருக்கும். மலையாளத்தின் அழியாப்புகழ் கொண்ட சில பழைய பாடல்கள் காலம் காலமாக, ஏறத்தாழ எல்லா மேடைகளிலும் தொடர்ந்து பாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று 'பழசி ராஜா' என்ற படத்தில் யேசுதாஸ் பாடிய 'சொட்ட முதல் சுடல வரெ' என்ற பாடல். கடந்த நாற்பதுவருடங்களாக பாடப்படும் இப்பாடல், ஏசுதாஸின் பெரும் புகழ்பெற்ற தொடக்ககால பாடல்களில் ஒன்று. ஆழ்ந்த சோகம் கொண்ட மெல்லிசை மெட்டும் நுட்பமான வயலின் இசைக்கோலங்களும் கொண்ட ஒரூ அரிய படைப்பு இது.

"அடுத்து வருவது, மறைந்த திரு. ஆர்.கெ.சேகர் இசையமைத்த 'சொட்ட முதல் சுடல வரெ' என்ற அர்புதமான தேசபக்திப்பாடல்" என்ற முன்னுரையுடன் தான் இப்பாடல் மேடைகளில் ஒலிக்கும். இது திரு. சேகர் இசையமைத்த முதல் திரைப்படப்பாடல் ஆகும். 1964ல் தான் இது வெளிவந்தது. அது ஏ.ஆர்.ரஹ்மான் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு!

கிறிஸ்துமஸ் காலங்களில் தேவாலயக்குழுக்கள் கேரளத்தில் பக்திப்பாடல்களைப் பாடியபடி வீடு வீடாகச் செல்லும் வழக்கம் உண்டு. இப்பாடல்களுக்கு கிறித்தவ கோரல் சங்கீத மரபுடன் எந்த தொடர்பும் இல்லை. அக்காலகட்டத்து திரைப்படமெட்டுக்களின் இசையில் அமைக்கப்பட்ட பக்திப்பாடல்களாக அவை இருக்கும். எழுபதுகளின் தொடக்கத்தில் ஃபாதர் ஊநுகல்லில் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் இப்படிப்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதுவதில் புகழ்பெற்றிருந்தார். அவர் இத்தகைய தனது சில பாடல்களுக்கு புதிய மெட்டுக்களைப் போட்டு ஒரு இசைத்தட்டை வெளியிட்டார்.

அப்போது பிரபலமாக இருந்த 'வைக்கத்து அஷ்டமி நாளில்' என்ற திபைப்பாடலின் மெட்டில் அவர் எழுதிய பாடல் 'பேத்லகேமில் ராவில்'. தட்சிணாமூர்த்தி இசையமைத்த கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்த அப்பாடல், அந்த இசைத்தட்டில் மேலையிசைப்பாணியிலான கிறித்தவ இசைமெட்டாக மறு ஆக்கம் செய்திருந்தார்கள். வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்த அந்த பாடல் கேரள கிறித்தவர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றது. இன்றும் அது மலையாள கிறிஸ்துமஸ் பாடல்களில் ஒரு கிளாசிக். அந்த இசைத்தட்டின் தொடக்க உரையில் அவ்விசையை அமைத்த ஆர்.கெ.சேகரை பாதிரியார் எடுத்துச்சொல்லி புகழ்ந்திருந்தார்.

சமீபத்தில் நான் புகழ்பெற்ற மலையாள இயக்குநர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தேன். அவர் பழைய மலையாளப் பாடல்களில் ஒரு நிபுணர் என்று தன்னைக் கருதிக் கொள்பவர். மலையாளப் பாடல்களின் ஆத்மாவை உணர்ந்து இசையமைக்க மலையாளியால் மட்டுமே முடியும் என்ற கோட்பாடு உடையவர். அவரது ஆதர்ச இசையமைப்பாளார் தேவராஜன் மாஸ்டர். காரின் ஒலிக்கருவியில் சுசீலாவின் குரலில் ஒலித்த 'பல்லவி மாத்ரம் பறஞ்ஞு தந்நு' [படம்: பட்டாபிஷேகம்-1974] என்ற பாடலை அவர் ரசித்து, கூடவே பாடியபடி வந்தார். பாடல் முடிந்ததும் உணர்ச்சிகரமாக, 'மாஸ்டரைப்போல மலையாளத்தின் ஆழமறிந்து இசையமைக்க யார் இருக்கிறார்கள்?' என்றார். உரிய மரியாதையுடன் நான் சொன்னேன், அது தமிழரான ஆர்.கெ.சேகர் இசை அமைத்த பாடல் என்று!

மலையாள திரை இசையில் எக்காலத்திலும் வாழும் ஆர்.கெ.சேகர் அங்கு 22 படங்களுக்கு மட்டும் தான் இசையமைத்திருக்கிறார். ஆனால் இசைகோர்ப்பாளராகவும் இசை நிகழ்த்துனராகவும் நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்காக பணியாற்றியிருக்கிறார். அவர் பல வெற்றிப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதுடன் பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் வெற்றிப் பாடல்களுக்குப் பின்னால் இருந்த திறமை உண்மையில் அவருடையதுதான் என்றும் சொல்லப்படுகிறது. மேலையிசையிலும் இந்திய இசைமரபிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த ஆர்.கெ.சேகர் தேவராஜன், தட்சிணாமூர்த்தி, ஏ.டி.உம்மர், எம்.கெ.அர்ஜுனன் போன்றவர்களின் இசைத்தொகுப்பாளாராக பணியாற்றினார். சலில் சௌதுரி செம்மீன் போன்ற படங்களுக்கு இசையமைத்தபோது ஆர்.கெ.சேகர் அவரது இசைநடத்துநராக பணியாற்றினார். ஆரம்பநாட்களில் சலில் சௌதுரி, தேவராஜன் ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா காம்போ ஆர்கனும் கித்தாரும் வாசித்தபோது, ஆர்.கெ.சேகர்தான் அவருக்கு இசைநடத்துநராக இருந்தார்.

சென்னைக்கு அருகே கிழான்னூர் என்ற ஊரில் புகழ்பெற்ற ஹரிகதைக் கலைஞராக விளங்கிய ராஜகோபால பாகவதருக்கு மகனாகப்பிறந்த ஆர்.கெ சேகரின் முழுப்பெயர் ராஜகோபால குலசேகர். அவர் தமிழக அரசில் ஒரு மின்சாரவேலைக்காரராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் விரைவிலேயே மலையாளத் திரையிசையில் உதவியாளராக நுழைந்தார். பெரும்பாலும் இசைமரபுகளை சுயமாகவே கற்றுத்தேர்ந்த ஆர்.கெ.சேகர் கர்நாடக இசையின் நுட்பங்களை தட்சிணாமூர்த்தியிடமிருந்து அறிந்துகொண்டார். அவருக்கு ஹார்மோனியத்தில் அபூர்வமான தேர்ச்சி இருந்தது. அவரது இசைக்கோர்ப்புத்திறனை உணர்ந்த எஸ்.டி.பர்மன் போன்றவர்கள் இந்திப்படங்களில் பணியாற்ற அவரை அழைத்தார்.

தேவராஜன், தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் பல வருடங்கள் பணியாற்றியபின் 'பழசிராஜா'வில் பத்து பாடல்களுக்கு இசையமைத்தபடி
சேகர் இசையமைப்பாளராக மலையாளத்தில் நுழைந்தார். 'சொட்டமுதல்' பாடலைத்தவிர ஏ.எம்.ராஜாவும் எஸ்.ஜானகியும் பாடிய சோகமெட்டான 'சிறகற்று வீணொரு கொச்சு தும்பி', சுசீலா பாடிய புகழ்பெற்ற தாலாட்டான 'முத்தே வாவாவோ' ஆகிய பாடல்கள் அதில் புகழ்பெற்றன. 'சாயிப்பே சாயிப்பே அஸலாமு அலைக்கும்' என்ற பாடல் ஆர்.கெ.சேகர் பிற்காலத்தில் அமைத்த ஏராளமான மாப்பிளைப்பாட்டுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. அதேவருடம் 'அயிஷா' என்ற படத்துக்கு இசையமைத்தார் ஆர்.கெ.சேகர். அதில் உள்ள 'முத்தாணே என்றே முத்தாணே' என்ற பாடல் இன்றும் புகழ்பெற்றது. 'அயிஷா'வில் ஆர்.கெ.சேகர்ரின் பிரபலமான பல மாப்பிளைப்பாட்டுகள் இருந்தன. அதில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய 'யாத்ரக்காரா போவுக போவுக!' என்ற பாடல் ஸ்ரீனிவாஸின் மிகச்சிறந்த பாடல்களின் ஒன்று.

ஆனால் சேகர் தன் அடுத்த படத்துக்காக ஏழுவருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. இக்காலகட்டத்தில் அவர் மிகவும் விரும்பப்பட்ட இசை நடத்துநராகவும் இசைக்கோர்ப்பாளராகவும் இருந்தார். செம்மீனுக்குப் பின்னர் அவருக்கு நேரமே இருக்கவில்லை, அவரும் வேலைவெறியராக இருந்தார். தனக்கு நேரமில்லாமல் போனதனால் ஆர்.கெ.சேகர், பிற்காலத்தில் புகழ்பெற்ற இசையமைபபளாரான ஷ்யாம் ஐ சலில் சௌதுரிக்கு நடத்துநராக அறிமுகம் செய்துவைத்தார். அதைத் தொடர்ந்து சலில்தாவின் ஏறத்தாழ எல்லாப்படங்களுக்கும் இசை நடத்துநராக மாறிய ஷ்யாமும் ஒரு தமிழர். மலையாளத்தில் தேவராஜனுக்குப் பின்னர் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர் அவரே. முந்நூறுக்கு மேல் படங்கள்! ஆர்.கெ.சேகர் தான் ஷ்யாமுக்கு திரை இசைத்துறையில் உதவிகள் செய்து வழிகாட்டியவர்.

தன் 31 வயதில் பதினேழுவயதான கஸ்தூரியை ஆர்.கெ.சேகர் மணம்புரிந்துகொண்டார். திருப்பதியில் அவர்களின் திருமணம் நடந்தது, சென்னையில் வாழ்ந்தனர். முதல் குழந்தை காஞ்சனா. அதன் பின் அவரது ஒரே மகன் திலீப். பாலா, ரேகா ஆகியோர் மற்ற இரு குழந்தைகள்.

1971ல் வந்த இரு மலையாளப்படங்கள் சேகரை இசையமைப்பாளராக மீண்டும் நிலைநாட்டின. பாடலாசிரியரும் திரைப்பட எழுத்தாளருமான ஸ்ரீகுமாரன் தம்பியுடன் இணைந்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து பன்னிரண்டு படங்களில் அவர்கள் இணைந்து பாடல்களை உருவாக்கினர். "சேகர் மீண்டும் இசையமைப்பதற்கு தேவையான தன்னம்பிக்கையை அளிப்பதில் எனக்கு ஒரு சிறு பங்கு இருந்திருக்கலாம்" என்றார் பின்னர் ஸ்ரீகுமாரன் தம்பி. 1971ல் வந்த அவர்களின் முதல் படம் சுமங்கலி 'உஷஸோ சந்த்யயோ' 'புளக முந்திரி' 'மான் மிழிகளிடஞ்ஞு' போன்ற முக்கியமான பாடல்களைக் கொண்டிருந்தன. 'யோகமுள்ளவள்' படத்தில் ஆர்.கெ.சேகர் பாலமுரளிகிருஷ்ணாவையும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் மலையாள திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.1972ல் வந்த 'மிஸ் மேரி' என்ற படத்தில்தான் இன்றும் கிறித்தவ மாதா பக்திப்பாடல்களில் முக்கியமானதாக கருதப்படும் 'நீயென்றே வெளிச்சம்' என்றபாடலை பி.சுசீலா படியிருந்தார்.

இசைக்கருவிகளின் புதிய ஒலிகளை அடையாளம் காணும் தனித்துவம் மிக்க கவனம் ஆர்.கெ.சேகருக்கு இருந்தது. இசைக்கருவிகளின் புதிய போக்குகளை அறிய அடிக்கடி சிங்கப்பூர் செல்வது அவரது வழக்கம். தென்னிந்திய இசையுலகுக்கு ஆரம்பகால சிந்தஸைஸர்களான யூனி வோக்ஸ், க்ளாவியோலின் முதலியவற்றை முதன் முதலாக அறிமுகம் செய்தார். அவை அப்போது சர்வதேச இசைக்குழுக்களிடம் மட்டுமே இருந்தன. அதேபோல ஆர்.கெ.சேகர் மலையாளத்தில் ஏராளமான பாடகர்களை அறிமுகம்செய்திருக்கிறார். மலையாளப்பாடகர்களில் மிகுந்த தனித்தன்மையுள்ள குரலும் உணர்ச்சிகரமான பாடுமுறையும் உடையவரான பிரம்மானந்தன் அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் போன ஒருவர். ஆர்.கெ.சேகர் பிரம்மானந்தனுக்கு அவரது இசைவாழ்க்கையிலேயே முக்கியமான 'தாமரப்பூ நாணிச்சு' என்ற பாடலை அளித்தார் [படம்: டாக்ஸி கார்]. புதிய குரல்களை அறிமுகம்செய்ய தயக்கம் நிலவிய அக்காலகட்டத்தில் மிக அதிகமான புதிய பாடகர்களை அறிமுகம்செய்தவர் அவர். சதானந்தன், சுதா வர்மா, கோபாலகிருஷ்ணன், சோமன், பொன்குந்நம் ரவி, ஜயலட்சுமி, கஸ்தூரி சங்கர், மனோகரன், அம்பிளி, ஜெயஸ்ரீ என பலரை சொல்லலாம். இவர்களில் பெரும்பாலானவர்களால் பிற்பாடு புகழ்பெற முடியவில்லை என்றாலும், புதிய பாடகர்களையும் இசைக்கலைஞர்கலையும் அறிமுகம் செய்யவும் அவருக்கு உதவவும் முயன்றவர் ஆர்.கெ.சேகர்.

ஆர்.கெ.சேகர் மலையாளத்தில் ஏறத்தாழ 110 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவற்றில் பல பாடல்கள் மலையாளத்தின் அழியாப்புகழுள்ள மெல்லிசை மெட்டுகளாக உள்ளன. 'ஆஷாட மாசம்' [வாணிஜெயராம்], 'பாதிராப்பூவொந்நு கண் துறக்கான்' [கமுகற புருஷோத்தமன் / பிசுசீலா], 'இப்போழோ சுகம் அப்போழோ' [யேசுதாஸ்], 'மணிவர்ணன் இல்லாத்த விருந்தாவனம்' [ ஜெயச்சந்திரன் / பி.சுசீலா],'ராகங்ஙள் ஃபாவங்ஙள்' [யேசுதாஸ் / பி சுசீலா], 'சுமங்கலாதிர ராத்ரி' [யேசுதாஸ்], 'வெள்ளித்தேன் கிண்ணம்' [ஜெயச்சந்திரன்], 'ஜென்மபந்தங்ஙள்' [யேசுதாஸ்] போன்றவை நினைவில் உடனடியாக வரும் பாடல்கள்.1976ல் வந்த 'சோட்டானிக்கர அம்மா' அவரது கடைசிப்படம்.

இசைவெறிகொண்ட, வேலைப்பித்தனாகிய சேகர் இரவுபகலாக பாடல்பயிற்சி, இசைக்கோர்ப்பு, பாடல் பதிவு என உணவும் உறக்கமும் இல்லாமல் பணியாற்றினார். பலநாட்கள் வெறும் டீயும் உலர்ந்த ரொட்டியும் மட்டுமே உணவாகக் கொண்டு ஒலிப்பதிவுக்கூடங்களிலேயே அவ்வப்போது கண்ணயர்ந்து வேலைசெய்தார். விளைவாக அவருக்கு கடுமையான வயிற்று நோய் ஒன்று வந்தது. ஒலிப்பதிவுக்கூடங்களிலேயே வாழ்ந்த ஆர்.கெ.சேகர் நோய் முற்றி பல்வேறு மருத்துவமனைகளில் படுத்த படுக்கையாக சிகிழ்ச்சை பெற்றார். ஏதுவும் பயனளிக்கவில்லை. அவரது உதவியாளர்கள் மருத்துவமனைகளில் சென்று நின்று அவரிடம் இசைக்குறிப்புகளை எழுதி வாங்கினர். 1977ல் தன் நாற்பத்திரண்டாம் வயதில் ஆர்.கெ.சேகர் மறைந்தார். 'சோட்டானிக்கர அம்மா' படத்தில் அவர் அமைத்த 'மனசு மனசின்றே காதில்' என்ற பாடல் கேரளத்தை இன்றும் மயக்கிக் கொண்டிருப்பது. அந்த படம் வெளியான அதே நாளில் அவர் மறைந்தார். கேரளத் திரையிசையின் புதிய நட்சத்திரமாக உயர்ந்த சேகருக்கு அவரது இசையுலக எதிரிகள் சூனியம் வைத்ததாக பேச்சு எழுந்தது! அவரது மகன் திலீபுக்கு அப்போது பதினொரு வயது.

1966 ஜனவரி ஆறாம் தேதி பிறந்த திலீப் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பேரில் உலகமெங்கும் புகழ்பெற்றிருக்கிறார். தந்தையுடன் பாடல்பதிவுக்கூடங்களுக்குச் சென்றதுதான் ரஹ்மானின் முக்கியமான இளம்பருவ நினைவாக உள்ளது. ''எனக்கு ஊக்கமூட்டும் நினைவாக இருப்பது என் அப்பாவின் நினைவுகள்தான். எங்கள் வீட்டு வராந்தாவில் அன்றைய புகழ்பெற்ற இயக்குநர்கள் வந்து காத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். ஒரேசமயம் எட்டு ஒன்பது படங்களுக்கு அவர் வேலைசெய்வார். ஒன்றுக்கு இசையமைப்பார், ஒன்றுக்கு இசை கோர்ப்பு செய்து கொடுப்பார், ஒன்றுக்கு இசை நடத்துவார். மிதமிஞ்சிய உழைப்பால்தான் அவர் உயிர்துறந்தார் என்று நான் நினைக்கிறேன். அவர் உதவிசெய்தவர்கள் பலர் இப்போதும் என்னிடம் சொல்வதுண்டு, அவர் எப்படி அவர்களுக்கு உதவிசெய்தார், எப்படி வாய்ப்புகள் வழங்கினார் என்றெல்லாம். அது என்னை மிகவும் பாதித்தது...''

இன்னொரு தருணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார் ''என் அம்மா அப்பாவைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். அவற்றைக் கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும். அப்பா இசையில் மிகவும் தேர்ச்சியுள்ளவராக கருதபப்ட்டார். அவரது பழைய பாடல்களை நான் இப்போதும் கேட்கிறேன். அவரது மகத்தான இசைஞானத்தின் ஒரு சிறு பகுதி தான் இறையருளால் எனக்கு வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்''.

இளம் வயதிலேயே திலீப் இசையின் ஆரம்ப கட்ட பயிற்சியை தந்தையிடமிருந்து கற்றார். வீடெங்கும் இசைக்கருவியாக இருந்த அச்சூழலில் அவரது மேதமை தன் வெளிப்பாடை கண்டடைந்திருக்க வேண்டும். நான்குவயதான திலீப் ஹார்மோனியத்தில் ஒரு பாடலை வாசிக்கக் கேட்ட சுதர்சனம் மாஸ்டர் அதன் கட்டைகளை ஒரு துணியால் ம¨ந்த்தாராம். குழந்தை தன்னம்பிக்கையுடன் அதே மெட்டை மீண்டும் வாசித்துக் காண்பித்ததாம். மகனின் அபூர்வமான திறமையைக் கண்ட சேகர் சொன்னாராம். ''என் வாழ்நாளெல்லாம் நான் இரண்டாமிடத்திலேயே இருந்துவிட்டேன். என் மகன் வழியாக ஒருநாள் நான் வெற்றி பெறுவேன் ''என்று.

முறையாக இசை பயின்றாலும்கூட திலீப் இசைத்துறைக்கு வர விரும்பவில்லை. ஒரு மின்பொறியாளராக வரவேண்டுமென்பதே அவரது விருப்பமாக இருந்தது. ''அப்போது நான் இசைமீது வெறியோடு இருக்கவில்லை. எனக்கு தொழில்நுட்பத்திலேயே ஆர்வமிருந்தது. குழந்தையாக இருந்தபோது எனக்கு சோறுபோடும் தொழிலாக மட்டுமே இசையை நினைத்தேன். அது என் அப்பாவின் அன்றாட வேலை. எனக்கு அதில் தனியான ஆர்வமேதும் இருக்கவில்லை'' அவர் சொன்னார்.

திலீபின் இசையார்வம் அவரது தந்தை வாங்கிவைத்திருந்த யூனி வோக்ஸ், க்ளாவியோலின் போன்ற மின்னணு இசை கருவிகளைச் சார்ந்து வளர்ந்தது. அக்காலங்களில் மின்னணு இசைக்கருவிகள் இந்திய இசையில் மிகமிகக் குறைவு. ''என்னால் அந்த கருவிகளில் இருந்து கண்ணை விலக்க முடிந்ததில்லை. தடைசெய்யபப்ட்ட அபூர்வமான விளையாட்டுப்பொருட்களாக அவை எனக்குத் தோன்றின'' திலீப் தன் நாளின் பெரும்பகுதியை அக்கருவிகளில் விளையாடுவதில் செலவழித்தார், அதுவே அவரது எதிர்காலத்தை வடிவமைத்தது.

இளம்வயதில் நோயுற்ற தந்தையுடன் மருத்துவமனைகள் தோறும் அலைந்தார் திலீப். அவரது அகால மரணம் திலீபின் உள்ளத்தை ஆழமாக பாதித்தது. பன்னிரண்டுவயதிலேயே தன் குடும்பத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு திலீபுக்கு வந்து சேர்ந்தது. சேகர் இறந்தபோது அவரது சொற்ப சம்பாத்தியத்தை மருத்துவமனைகளில் செலவழித்துவிட்டிருந்தமையால் குடும்பம் அவர் வாங்கி வைத்திருந்த மின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு வாழ நேர்ந்தது. அக்கருவிகளுடன் திலீபும் சென்றார், தேவையானபோது வாசித்தார்.

திலீப் இளவயதில் கடுமையாக உழைத்து கஷ்டப்பட்டிருக்கிறார். பதிமூன்று வயது முதல் பல பயில்முறை மெல்லிசைக்குழுக்களுக்கு அவர் பின்னணி இசைக்கருவியாளராக வேலை செய்தார். இக்காலகட்டம் திலீபுக்கு சிறந்த பயிற்சிக்களமாக அமைந்தது. பின்னர் ரூட்ஸ், மேஜிக், நெமிஸிஸ் அவென்யூ போன்ற சென்னையின் மேல் இசைக்குழுக்களிலும் பங்கு பெற்றுள்ளார். ரஞ்சித் பரோட், சிவமணி ஆகியோருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் வாசித்தார். இளையராஜாவின் மேடை இசைக்குழுவில் அவர் கீபோர்ட் வாசித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவிலும் வாசித்திருக்கிறார். சாகீர் ஹுசைன், குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் அவர்களுடைய உலகப்பயணங்களில் பங்கெடுத்தார். அவர் இசையிலேயே மூழ்கி அதையே தன் வாழ்க்கையின் ஒரே இன்பமாகக் கொள்ள ஆரம்பித்தார். விளைவாக அவருக்கு கல்வியை தொடர முடியாமல் போயிற்று. பல பள்ளிகள் மாறியபின் பள்ளி இறுதியிலேயே அவர் படிப்பை விட்டுவிட்டார். அவரது அன்னை அவர் தன் தந்தையின் இசைத்துறையிலேயே செயல்படுவதை ஊக்கப்படுத்தினார். இளையராஜாவின் அன்றைய முன்னணி கீபோர்ட் நிபுணரான விஜய் மானுவேலின் கீழ் பல படங்களில் பணியாற்றிய திலீப் 'புன்னகைமன்னன்' போன்ற படங்களில் இசைக் கோர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அப்பாடல்களில் கருவியிசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் தனித்தன்மையை இப்போது நாம் அடையாளம் காண முடியும்.

திலீபுக்கு தனியாகப்பெயர் வாங்கி தந்தது 1987ல் ஆல்வின் டிரெண்டி கைக்கடிகாரங்களுக்காக அவர் விளம்பரப்பாடலை அமைக்க கிடைத்த வாய்ப்புதான். இசைநிகழ்ச்சிகளில் வாசிப்பதை விட்டுவிட்டு முழுநேர விளம்பர இசையமைப்பாளாராக ஆனார். ஐந்து வருடங்களில் முந்நூறு விளம்பரங்களுக்கு இசையை அமைத்திருக்கிறார். அவரது விளம்பர இசைக்கோலங்கள் பிரபலமானவை. பாரீஸ், லியோ காபி, பூஸ்ட், டைடன், பிரீமியர் பிரஷர் குக்கர், எம்.ஆர்.ஃப் டயர்ஸ், தி ஹிண்டு, ஏஷியன் பெயிண்ட்ஸ் ஆகியவற்றுக்கான அவரது மெட்டுகள் இன்றும் நினைக்கப்படுபவை. ஏஷியானெட் தொலைக்காட்சி போன்றவற்றின் தலைப்பு இசையையும் அவரே அமைத்தார். ''விளம்பரப்பாடல்களுக்கு இசையமைப்பது இசையில் கச்சிதத்தன்மையைப்பற்றிய உணர்வை உருவாக்கியது. நமக்கு சில நொடிகளே தரப்படுகின்றன. அதற்குள் நாம் ஒரு மனநிலையை உருவாக்கி ஒரு செய்தியையும் சொல்லியாகவேண்டும். விளம்பர இசையே எனக்கு இசையின் கட்டுப்பாட்டை கற்பித்தது'' பின்னர் அவர் சொன்னார். இக்காலகட்டத்தில் 'தீன் இசை மாலை' என்ற பேரில் அவர் அமைத்த இஸ்லாமிய பக்திப்பாடல் தொகுதியே அவரது முதல் இசைவெளியீடாகும்.

துயரம் மிகுந்த நாட்களில் இஸ்லாமிய இறை நம்பிக்கையில் திலீப் ஆறுதலை கண்டடைந்தார். 1988 ல் அவரது சகோதரி அவர்களின் தந்தைக்கு வந்த அதே நோயில் விழுந்து மரணப்படுக்கையில் இருந்தபோது எல்லா முயற்சிகளும் தோற்ற நிலையில் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி என்ற ஒரு முஸ்லீம் சூஃபி பீர் அவளைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அந்நிகழ்ச்சிக்குப் பின் மொத்தக் குடும்பமே இஸ்லாம் மதத்துக்கு மாறியது. முதலில் அப்துல் ரஹ்மான் என்று பெயர் போடப்பட்ட திலீப் பின்னர் அல்லா ரக்கா ரஹ்மான் என அதை மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே ஏ.ஆர்.ரஹ்மான்.

மதமாற்றம் பற்றி கேட்கப்பட்டபோது ரஹ்மான் சொன்னார், "என் அப்பா நோயில் வதைபடுவதை நான் கண்டேன். ஏழெட்டு மருத்துவமனைகளில் அவர் சிகிழ்ச்சை பெற்றார். வேலூர் சி எம் சி மருத்துவமனையிலும் பின்னர் விஜயா மருத்துவமனையிலும் அவர் கிடந்தார். அவருக்கு தாங்கமுடியாத வலி இருந்தது. மருத்துவ மனையில் அவரது படுக்கையருகே கிறித்தவ பாதிரிகள் அவருக்காக ஜெபிப்பதை நான் கண்டிருக்கிறேன். அவருக்காக வீட்டில் தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டன. ஆனால் அப்பா இறந்தார். அதன் பின் சற்று காலம் கடவுளே இல்லை என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்குள் ஓர் அமைதியின்மை இருந்துகொண்டே இருந்தது. நம் வாழ்க்கையை நிர்வகிக்கும் ஒரு அடிப்படை வல்லமை இல்லாமல் வாழ்க்கையே சாத்தியமில்லை என்று பின்னர் உணர்ந்தேன். அந்த உண்மையை இஸ்லாமில் கண்டுகொண்டேன். பீர் சாகிபின் உபதேசத்துக்கு ஏற்ப தர்காக்களுக்கு என் அம்மாவுடன் சென்றுவந்தேன். நாங்கள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு உறுதியுள்ளவர்கள் ஆனோம்.'' அவரது அன்னை கரீமா பேகம் ஆக மாறினார். ரஹ்மானின் சகோதரிகளும் மதம் மாறி ரைஹானா, தலத், இஸ்ரத் ஆக மாறினார்கள். "இஸ்லாமும் சூஃபி நம்பிக்கையும் எனக்கு அமைதியையும் மன உறுதியையும் அளித்தன. திலீபாக இருந்த எனக்கு பலவிதமான தாழ்வுணர்ச்சிகளும் மனச்சிக்கல்களும் இருந்தன. ஏ.ஆர்.ரஹ்மானாக நான் மீண்டும் பிறந்ததுபோல் உணர்கிறேன்...''.

தன் திரையிசை நுழைவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார் ''நான் ஏன் ரோஜா படவாய்ப்பை ஏற்றுக்கொண்டேன் என்று தெரியவில்லை. எனக்கு 25000 ரூபாய் பேசப்பட்டது. அதை நான் மூன்றே நாட்களில் விளம்பரப்பாடல்களில் ஈட்டிவிடுவேன். மணிரத்னத்துடன்
வேலைபார்ப்பது என்னை கவர்ந்திருக்கலாம். தன் படங்களின் இசைக்காக மிக அதிகமாக கவனெமெடுத்து உழைப்பவர் அவர். அவரது காட்சியாக்கம் என்னை பெரிதும் கவர்கிறது. ஒரு சாதாரணமான மெட்டைக்கூட அவர் தன் காட்சிகள் மூலம் நான்குமடங்கு மேம்படுத்தி அதற்கு புதிய தளங்களை அளித்து விடுவார். பிற இசையமைப்பாளரின் சாயல் கொண்ட அனைத்து மெட்டுகளையும் நிராகரித்து என் தனித்தன்மை வெளிப்பட்ட மெட்டுகளை மட்டுமே அவர் தேர்வுசெய்தார்..''

பலரும் நினைப்பதுபோல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதலில் வெளியான படம் ரோஜா அல்ல, மோஹன்லால் நடித்த மலையாளப்படமான 'யோத்தா' தான். 1992 ஆரம்பத்தில் இப்படம் வந்தது. யோத்தா படத்தில் ஒரு சரியான கேரள நாட்டுப்புறப்பாட்டு இருந்தது. 'படகாளி சண்டிச் சங்கிலி' என்ற அந்த வேகமான பாடல் கேரள நாட்டுப்புற பாடலான படையணிப்பாட்டின் பாணியில் அமைந்து பெரும் புகழ்பெற்றது. இனிய மெட்டான 'மாம்பூவே' தான் அதிலுள்ள சிறந்த பாடல் என்பது என் எண்ணம். அது பின்னர் தமிழில் 'பவித்ரா' என்ற படத்தில் 'செவ்வானம்' என்ற பாடலாக வந்தது.

ஆகஸ்ட் 1992ல் ரோஜா வெளிவந்தது. அதன் இசை மிகவும் எதிர்பார்க்கபப்ட்டது. காரணம் இளையராஜாவை பிரிந்து மணிரத்னம் எடுத்த முதல் படம் அது என்பதுதான். பலரும் அந்த இருபத்தைந்து வயது இசையமைப்பாளரின் திறமையைப்பற்றி சந்தேகம் கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ் இசை என்றாலே இளையராஜாதான் என்று நினைக்கும் ஒரு தலைமுறையே உருவாகிவிட்டிருந்தது. ஆனால் படம் வந்த சில நாட்களிலேயே தமிழ்நாட்டில் வீடெங்கும் பேசப்பட்ட பெயராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆனார். அப்பாடல்கள் ஒரு புதிய இசையுகத்தின்
தொடக்கமாக அமைந்தன. பெரும் வணிகவெற்றியுடன் அவ்வருடத்தில் ஏறத்தாழ எல்லா முக்கிய விருதுகளையும் அவை பெற்றன. தன் முதல்படத்துக்கே தேசியவிருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் தான்!

ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைகளைப் பற்றி பேச வேண்டியதில்லை. அவை நம் கண்முன்னாலேயே உள்ளன. அவரது இசை மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிகப்படியான தொழில்நுட்பத்தன்மை, அதிகமான நவீனத்தன்மை, மிகையான மேலைநாட்டுபாதிப்பு, திரும்பதிரும்ப ஒரே மாதிரியான முயற்சிகள், ஆத்மா இல்லாத கருவியிசை, அனைத்துக்கும் மேலாக நகலெடுப்பு....! ஒன்றை நினைவுகூறுங்கள், இவையெல்லாம் புதுவழி வெட்டி முன்னால் சென்ற அனைத்து முன்னோடிகளைப்பற்றியும் சொல்லபப்ட்ட குற்றச்சாட்டுகள்தான். அவர் தன் ஒவ்வொரு பாடலிலும் தனித்தன்மையுள்ள ஒலிநேர்த்தியைக் கொண்டு வந்ததன் மூலம் இந்திய திரையிசையில் ஒரு புரட்சியை நிகழ்த்தியவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. எளிய இன்னிசைமெட்டுகள் மேல் அவருக்குள்ள தேர்ச்சியும் ஒவ்வொரு பாடகரில் இருந்தும் அவரது மிகச்சிறந்த திறமையை வெளிக்கொணர அவர் எடுத்துக்கொள்ளும் கவனமும் மிக முக்கியமானவை.

ஏ.ஆர்.ரஹ்மானின் மேதமை அவரது மெல்லிசைமெட்டுகள்சார்ந்த கற்பனையிலும் அலாதியான தாள உணர்விலும் மட்டும் இல்லை. அவரது ஒலிப்பொறியியல் தேர்ச்சியையும் எடுத்துச் சொல்லியாகவேண்டும். அவரது பல பாடல்கள் முதலில் கேட்டால் சாதாரணமாகத் தோன்றும். தொடர்ந்து கேட்கக் கேட்க அவை மேலும் மேலும் விரிவடைந்து நுட்பங்களைக் காட்டி வளார்ந்தபடியே செல்லும். இந்த இயல்பு ரஹ்மான் வந்த காலகட்டத்துக்கு உரியதும்கூட. பழைய காலத்தில் அதிகமான இசைப்பதிவுக்கருவிகள் இல்லாத நாளில் மெட்டுகள் கேட்டதுமே கவர்பவையாக இருக்க வேண்டியிருந்தது. எங்கும் குறுவட்டுகளும் குற்றலை வானொலிகளும் மலிந்த இன்று பாடல்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். நம்மைக் கவர்ந்த பல பாடல்கள் சீக்கிரமே சலித்துப்போய் எரிச்சலூட்ட ஆரம்பித்துவிடுகின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் அப்படியல்லாமல் கேட்கும் தோறும் புதிய வடிவம் கொள்பவையாக உள்ளன. புதுமையான கருவியிசை இடையீடுகள், வழக்கத்தை மீறிய இசையொருமைகள், நுட்பமாக மாறுபடும் தாள அமைப்புகள், படைப்பூக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட குரல்கள் ஆகியவற்றின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் அதை நிகழ்த்துகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி திரையிசையை ஒரு அலைபோல தாக்கி மூழ்கடித்தார். இந்திய திரையிசையை உலகமெங்கும் கேட்கவைத்த முதல் இசையமைப்பாளரும் அவரே. பல இந்திய இசை நிபுணர்கள் உலக அளவில் புகழ்பெற்றிருந்தாலும் அவர்களின் அங்கீகாரம் செவ்வியலிசையின் சிறு வட்டத்துக்குள்தான் இருந்தது. இந்தியாவிலிருந்து உலகக் கவனத்தைப் பெற்ற முதல் திரை இசை நட்சத்திரம் ஏ.ஆர்.ரஹ்மான்தான். இன்று அவருக்கு பிரேஸில், ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரேலியா போன்ற தொலைதூரநாடுகளில்கூட லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது சாதனைகள் இனிவரும் இசையமைப்பாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்குபவை. அறிமுகமான பத்துவருடங்களிலேயே பத்மஸ்ரீ விருது, 14 ஃபிலிம் ஃபெர் விருதுகள் [தமிழுக்கு 9, இந்திக்கு 5], 3 தேசிய விருதுகள், 6 தமிழ்நாடு அரசு விருதுகள் எண்ணற்ற தனியார் விருதுகள்... ரஹ்மான் பெற்ற அங்கீகாரமே வியப்பூட்டுவது, சமீப காலத்தில் எவரும் தொடமுடியாதது.

இன்று ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற விரும்பாத மேதைகள் இல்லை. அவர் பாட்டுக்கு ஆட விரும்பாத நடிகர்களும் இல்லை. நுஸ்ரத் ஃபதே அலி கான், மைக்கேல் ஜாக்ஸன், சர் ஆன்ரூ லாயிட் வெபர், டீப் ஃபாரஸ்ட், ஸகீர் ஹுசைய்ன், டமினிக் மில்லர், டேவிட் பெயர்ன், உஸ்தாத் சுல்தான் கான், பண்டிட் விஸ்வ மோகன் ஃபட் போன்ற பலதரப்பட்ட இசைவல்லுநர்கள் அவருடன் பணியாற்றியிருக்கிறார்கள். 1989ல் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிய சிறிய இசைப்பதிவகமான 'பஞ்சத்தான் ரெகார்ட் இன்' இப்போது அதி நவீன வசதிகளுடன் இந்தியாவின் முதன்மையான ஒலிப்பதிவகமாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து புதியகுரல்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். ''பாடும்போது குரலில் ஏற்படும் பிசிறுகள் கூட இசைக்கு ஒரு இயல்பான அழகை அளிக்கும்' என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். பாடலுக்கு தேர்ந்த குரல்கள் தேவை என்ற எண்ணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் உடைத்தார். அவரது குரலும் அத்தகையது. 'ஹம்மா ஹம்மா', 'முஸ்தஃபா முஸ்தஃபா' பாடலில் அவரது குரலில் பயிற்சியில்லாத இளைஞன் பாடும் உற்சாகம் வெளிப்படுகிறது. 'தில் சே ரே', 'வெள்ளைப்பூக்கள்' போன்றவை அவர் குரலில் வந்த உணர்ச்சி மிக்க பாடல்கள். பல கர்நாடக சங்கீத கலைஞர்களை திரையிசைக்குக் கொண்டுவந்தவரும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பதையும் இங்கே நாம் மறக்க முடியாது.

ஆர்.கெ.சேகர் கேரளத்தின் தனித்துவம் மிக்க இஸ்லாமிய நாட்டுப்பாடலான மாப்பிளப்பாட்டு வகையில் ஏராளமான மறக்கமுடியாத பாடல்களை அமைத்தவர். அவற்றில் இஸ்லாமியப் பண்பாட்டுக்கூறுகள் கச்சிதமாக அமைந்திருக்கும். அவரது மகன் முஸ்லீமாக ஆனதில் ஏதோ ஒரு தொடர்ச்சி இருப்பதாக சிலராவது நம்புகிராற்கள்! ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி பெயர் சைரா பானு. அவருக்கு கதீஜா, ரஹீமா என்று இரு மகள்களும் குவாஜா முகம்மது ரூமி ரஹ்மான் என்ற மகனும் உள்ளனர். அவரது சகோதரிகள் அவ்வப்போது அவருடன் மேடையில் பாடுவதுண்டு. ரைஹானா இசையமைப்பாளரும்கூட. ரைஹானாவின் மகன் ஜி.வி.பிரகாஷ் 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆர்.கெ.சேகரின் இசைப் பாரம்பரியம் தொடர்கிறது.

ஆர்.கெ.சேகருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையேயான ஒப்பீடு வியப்பூட்டுவது. ஒட்டுமொத்தமாகப்பார்க்கையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆர்.கெ.சேகரின் நேரடியான நீட்சியே. பல்வேறு இசைப்பாணிகளை படைப்பூக்கத்துடன் கலந்து சோதனை செய்வது, எளிய இனிய மெட்டுகள், கச்சிதமான ஒலிநேர்த்திக்கான தொடர்ந்த தேடல், புதிய இசையொலிகளுக்கான ஆர்வம், புதிய குரல்களை அறிமுகம் செய்தமை... இவை தான் ஆர்.கெ.சேகரின் தனித்தன்மைகள். இவையே ஏ.ஆர்.ரஹ்மானின் இயல்புகளும் கூட. சேகரைப்போலவே ரஹ்மானுக்கும் மின்பொறியியலில் ஓர் அடிப்படை ஆர்வம் இருந்திருக்கிறது. அது மின்னிசைக்கருவிகள் மேல் உள்ள நாட்டமாக மாறியிருக்கிறது. சேகரைப்போலவே ரஹ்மானும் தன் மொழியின், பண்பாட்டின் எல்லைக்குள் நிற்க மறுத்து இசைக்கே உரிய
தனிப்பண்பாட்டு வெளி ஒன்றில் வாழ்பவர். ஆர்.கெ.சேகர் தோல்வியடைந்த இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நம்பமுடியாத மாபெரும் வெற்றிகளை அடைந்தார். வெற்றிக்காக ஆர்.கெ.சேகரின் அகம் கொண்ட தவிப்பே ஏ.ஆர்.ரஹ்மான் ஆக விசுவரூபம் எடுத்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது.


நன்றி : ஜெயமோகன்


நான் கடவுள் - திரை விமர்சனம்

2, 3 வருட தாமதம், அடுத்தடுத்து படத்தின் கதாநாயக, நாயகிகளின் மாற்றம் என்ற செய்திகள் ஆகியவை ஏகத்துக்கு நான் கடவுள் படம் தொடர்பான எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்க, சேது, நந்தா, பிதா மகன் போன்ற சராசரி தமிழ் சினிம இலக்கணங்களிலிருந்து முற்றிலும் விலகிய வகையில் திரைப்படங்களை உருவாக்கி அளிக்கும் இயக்குநர் பாலாவின் படம் என்பதால் நீண்ட தவத்திற்கு பிறகு வந்த நான் கடவுளை பார்க்க எனக்கு மிகவும் ஆவல் ஏற்பட்டதால் பார்த்தேன்.

தமிழக மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே முற்றிலும் அறிமுகமில்லாத கதைக்களனை உள்ளடக்கியது நான் கடவுள் திரைப்படம். அது பிச்சை எடுப்பவர்களின் அந்தரங்க உலகம். அந்த உலகம் தான் அதிர்ச்சி, அருவெருப்பு, ஆச்சரியம், அன்பு, அதிகாரம், ஆணவம் போன்ற எத்தனை வகையான உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கிறது.!! இப்படத்தின் கதையை வலையுலகில் பலரும் பிரித்து மேய்ந்து விட்டதால் மீண்டும் தட்டச்ச அலுப்புப்பட்டு கதையை எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவிலிருந்து வெட்டி ஒட்டுகிறேன். அடுத்து படம் தொடர்பான என் விமர்சனத்தை தருகிறேன்.

ஒரே ஒரு ஊர்ல ஓரே ஒரு அப்பாவாம். அவருக்கு ஒரே ஒரு பையனாம். அவன் உங்களுடன் இருந்தால் தோஷம் என்று நான்கு ஜோதிடர்கள் ஒரே மாதிரி சொல்கிறார்களாம். அப்பா தன் மகனை கங்கைக் கரையில் மந்திரம் படிக்க விட்டு விடுகிறாராம். பதினைந்து வருடங்கள் கழித்து மகனைப் பார்க்க, ம்களோடு காசிக்கு வருகிறாராம். அங்கு பிணங்களை எரிக்கிற, தியானம் செய்கிற, மந்திரம் சொல்கிற, சுயம்புநிலைப் பித்தனாய் மகனைப் பார்க்கிறாராம். அவனை வளர்த்த குருவின் சொல் கேட்டு, உறவுகளை முழுமையாய் அறுத்தெறியும் பொருட்டு, தேடி வந்த உறவுகளோடு ஊருக்கு மகன் புறப்படுகிறானாம்.

கருப்புப் போர்வை மாதிரியான உடையில், கபாலமணி மாலையணிந்து, கஞ்சா அடித்துக் கொண்டு, தாடி முடியோடு வெறித்த பார்வையோடும் அல்லது மூடிய கண்களோடும் இருக்கிற மகனைப் பார்த்து அம்மா அதிர்ந்து போகிறார். நள்ளிரவில் உடுக்கை அடித்துக் கொண்டு புகை நடுவே காட்சியளிக்கும் அவனைப் பார்த்து அண்டை வீட்டார் மிரண்டு நிற்கிறார்கள். இந்த இடத்தில் நிற்க.

உடல் வளர்ச்சி குன்றிப்போயிருக்கிற, உறுப்புகள் சிதைந்திருக்கிற, கைவிடப்பட்ட, வயதான, ஆண் பெண் பாலற்ற, இயல்பான தோற்றமற்ற என பல ரூபங்களில் அசாதாரண மனிதர்கள் வருகிறார்கள். அவர்களை கூட்டம் கூட்டமாய் சேகரித்து, அவர்களை பிச்சையெடுத்துப் பிழைக்க வைக்கிற கருப்பு மொட்டைத் தலையன் ஒருவன் இருக்கிறான. பிச்சையெடுக்க வைக்க அவன் கையாளும் கொடூரத்தனங்கள் காண்பிக்கப்படுகின்றன.

நள்ளிரவில் துடியாக பித்தன் புறப்படுகிறானாம். மலைக் கோவிலுக்குச் செல்கிறானாம். அங்கு போய் குகை மாதிரியான இடத்தில் உட்கார்ந்து கொள்கிறானாம். இந்த இடத்திலும் நிற்க.

மலைக்கோவில் வாசலில் அவர்கள் பிச்சையெடுக்கிறார்கள். சிவன், பார்வதி, கிருஷ்ணர், அனுமன் என ரூபங்கள் புனைந்து இருக்கிறார்கள்.

ஆடிப்பாடிப் பிழைக்கும் கூட்டம் ஒன்று. அதில் கண்ணற்ற பாடகி ஒருத்தி இருக்கிறாள். போலீஸ் உதவியோடு ஒருவன் அவளை பிச்சையெடுக்க வைக்க தூக்கிச் செல்கிறான். அழுது கலங்கி நிற்கும் அவளுக்கு, வந்து சேர்ந்த இடத்தில் இருக்கும் மற்றவர்கள் அன்போடு உறவாகிறார்கள். அவர்களிடமும் சந்தோஷமும், நையாண்டியும், வாழ்வும் இருக்கிறது.

காவியுடை அணிந்த இதர சாமிகள் எல்லாம் பித்தனது விசித்திர நடவடிக்கை கண்டு கண்களை விரிக்கிறார்கள். விலகி நிற்கிறார்கள். ஒரே இடத்தில் அசையாமல் படுத்து இருக்கிறானாம். அம்மா வந்து வீட்டுக்கு அழைக்கிறார்கள். பெண்ணைப் பற்றிய சித்தர் பாடல் சொல்லி வெறிக்கிறானாம். அம்மா மயங்கிய வெளியில் அழுதுகொண்டே வீட்டுககுப் போய் அவன் ஒரு சுயம்பு என புரிந்து கொள்கிறாளாம். திரும்பவும் நிற்க.

மலையாளத்தில் இருந்து வெத்திலை வாயோடு ஒருவன் கருப்பு மொட்டையை சந்திக்கிறான். தொழில் அபிவிருத்திக்கு திட்டம் சொல்கிறான். இங்கிருப்பவர்களை அங்கும், அங்கிருப்பவர்களை இங்குமாக மாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். மலைக்கோவிலில் பிச்சையெடுப்பவர்களை கதறக் கதற முரட்டுத்தனமான மனிதர்கள் தூக்கிச் செல்கிறார்கள். மீதமிருப்பவர்கள் இரவில் அழுகிறார்கள். அடுத்த நாள் கண்ணற்ற பாட்கியை துக்கிச் செல்ல வருகிறார்கள். அவள் கதறி, திகைத்து ஓடுகிறாள். பித்தன் காலைப் பிடித்துக் கொள்கிறாள்.

பித்தன் அந்த முரட்டு மனிதர்களை தாக்குகிறானாம். வெத்திலை வாயனை துவம்சம் செய்கிறானாம். பிணமாக தோளில் போட்டு அடர்ந்த மரங்களுக்குள் செல்கிறானாம். காவல் நிலையத்தில் அவன் பாட்டுக்கு உட்கார்ந்திருக்கிறானாம். கோர்ட்டில் ஜட்ஜ் முன்பு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து நான் கடவுள் என்கிறானாம். இந்த இடத்திலும் நிற்க.

கண்ணற்ற பாடகிக்கு ஒரு சிஸ்டர் ஆறுதலையும், கடவுளின் வார்த்தைகளையும் சொல்லி அனுப்புகிறாள். மொட்டைத் தலையன் அவளைப் பிடித்து வந்து சித்திரவதைப் படுத்துகிறான். முகத்தில் கல்லை வைத்து அடிக்கிறான். சுவரில் தேய்க்கிறான்.

போலீஸார் ஐந்து நாட்கள் கூடவே இருந்து அவன் குளிப்பதையும், தலைகீழாக நிற்பதையும், கஞ்சா அடிப்பதையும் பார்க்கிறார்களாம். அவன் மேல் தவறு இல்லை என விடுவிக்கும்படி போலீஸ் சொல்கிறதாம். வெளியே வரும் அவனை கருப்பு மொட்டை பார்க்கிறான். மலைக்கோவில் அருகே பித்தனோடு சண்டைக்குப் போகிறான். பித்தன் அனாயசமாக அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறனாம். பாறையில் மோதி கருப்பு மொட்டையிலிருந்து ரத்தம் வருகிறது.

குகைக்குள் பித்தன் தலைகீழாக நிற்கிறானாம். கண்ணற்ற அழகி அவன் முன் தரையில் கிடந்து சிதைந்த முகத்தோடு அழுது புரளுகிறாள். தங்களை ஏன் கடவுள் இப்படிப்பட்ட பிறவிகளாய் படைத்தான் என்று புலம்புகிறாள். எந்தக் கடவுளும் தன்னைக் காபாற்ற வரவில்லையே என்று சத்தம் போடுகிறாள். வாழ இயலாதவர்களுக்கு மரணம் ஒரு வரம் என குரு சொன்னது அவன் நினைவுக்கு வருகிறதாம். இப்போதும் நிற்க.

வெளியே நிராதரவான மற்றவர்கள் காத்து நிற்கிறார்கள். உள்ளே கழுத்தறுபட்டு கண்ணற்ற பாடகியின் துடிப்புகள் அடங்குகின்றன. பித்தன் அவன் போக்கில் போய்க் கொண்டு இருக்கிறானாம். இப்போது நீங்களும் தியேட்டரை விட்டுப் போகலாம்.

கதை இத்துடன் முடிந்ததால் இனி என் விமர்சனத்திற்கு வருகிறேன். பொதுவாகவே பாலா தன் படங்களில் விளிம்பு நிலை மனிதர்களை உலவ விடுவதில் வல்லவர். சேதுவில் பைத்தியம், நந்தாவில் அகதி, பிதா மகனில் வெட்டியான் போன்று நான் கடவுளில் பிச்சைக்காரர்கள் என்று தொடர்கிறது. அது போதாதென்று நம்மில் பலருக்கு இது வரை தெரியாதிருந்த அகோரி என்ற நரமாமிசம் தின்னும் ஆன்மீக கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மிகவும் நான் பார்க்க துடித்த ஒரு படத்தை இன்னொரு முறை பார்க்க முடியாது என்னும் முடிவுக்கு என்னை வரவழைக்க செய்த படம் இது. அதற்கு அடிப்படை காரணம் எந்த விதமான வெறுப்புணர்வும் நிச்சயம் கிடையாது என்று நான் சொல்லவில்லை என்றால் அது பாலா போன்ற நேர்மையான, திறமையான கலைஞனை அவமானப்படுத்தியது போல் ஆகிவிடும். பிறகென்ன காரணம்..? இந்த படம் எனக்குள் ஏற்படுத்திய விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை முறை, அதற்குள் பொதிந்து கிடக்கும் உண்மை உணர்த்தும் கசப்புணர்வே காரணம். எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத மிகவும் குழப்பமான உணர்வு இது.

அகோரி கதாப்பாத்திரம் ஏற்றிருக்கும் ஆர்யாவை இனி சாக்லேட் பேபியாக நினைக்கவே நமக்கு மனம் வராது. அந்த அளவுக்கு அதன் கதாப்பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். இவரின் அறிமுக காட்சி இது வரை எந்த கதாநாயகனும் அறிமுகமாகாத வகையில் பிரம்மிப்புடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பேசும் தமிழ் படத்தில் தமிழ் கதாநாயகன் இத்தனை குறைவான வசனங்களை பேசி நடித்திருப்பது இதுவாகத்தான் இருக்கும். அவரின் வசனங்கள் செய்ய வேண்டிய வேலையை நடிப்பும், இசையும் ஈடு செய்து விடுகிறது. இத்தனை பட வாய்ப்புகளை இந்த படத்தினால் இழந்ததை இப்பட பாராட்டுக்கள் போக்கிவிடும் வாய்ப்புகள் ஏராளம். அதே போல் ஒருவொருக்கொருவர் தொட்டுக்கொள்ளாத, காதல் வசனம் பேசாத, டூயட் பாடாத கதாநாயகன், கதாநாயகி உள்ள இந்த படம் தமிழ் சினிமா உலகின் அத்திப்பூ..! பார்வையாளனின் நியாயத்தை ஒட்டி கதாநாயகனின் செயல்பாடுகளை அமைக்கும் பாத்திர வடிவமைப்புக்கிடையில் இந்த படத்தில் ஆர்யாவின் பாத்திர வடிவமைப்பு அந்த அகோரி பாத்திரத்தின் நியாய அடிப்படையில் அமைந்துள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் இப்படி கதாநாயகன் கொலை செய்வது நியாயமா என்ற சர்ச்சையை ஏற்படுத்தும் பூஜாவின் கொலை..!

படத்தின் ஒரு ஒவ்வொரு கதாபாத்திரம், காட்சியமைப்பு, கதாபாத்திரத்திரத்தின் க்ளோசப் காட்சி, காமிரா நகரும் திசை, கோணம் என்று ஒவ்வொன்றையும் மிகவும் ஆழ்ந்து சிந்தித்து செதுக்கி இருக்கிறார். எதையும் காரணமில்லாமல் பாலா அமைக்கவில்லை. அப்படி யாரேனும் எண்ணினால் அது பார்வையாளனின் புரிதலில் உள்ள குறையாகத்தான் இருக்க முடியும். அது மட்டுமல்லாமல் உண்மையை உள்ளபடி சொல்லும் முயற்சியில் இப்படத்தின் பல காட்சிகள் தணிக்கைக்குள்ளானதில் சிலருக்கு படம் தொடர்பற்று செல்வது போன்ற பிரமையை ஏற்படுத்தவும் கூடும். இப்படத்தில் இரசிகன் உணரும் இரு விருப்பற்ற உணர்வுகள் என்றால் ஒன்று அருவெருப்பு - அது பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை பிரதிபலித்ததால் ஏற்பட்டது. அடுத்தது வன்முறை - அது பிச்சைக்காரகளின் வாழ்க்கையில் இணைந்து இருக்கும் நிழலுக மனிதர்களின் கொடூர முகம் தரும் உணர்வு. இவை இரண்டுமே தவிர்க்க முடியாதது.

கண்ணைக்கவரும் கவர்ச்சிப்பாவையாய் திரைப்படங்களில் உலா வந்த பூஜாவா இது..? அவரை இனம் காண மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது. மிகவும் தேர்ந்த நடிப்பு மற்றும் ஒப்பனை. பொதுவாக குருடர்களாக காட்ட பயன்படுத்தப்படும் மேல் நோக்கி செருகியபடி கண்களை வைத்துக்கொள்ளும் உத்தியை புறந்தள்ளி இயல்பான குருடர்களை அச்சு அசலாக காட்டும் விழி லென்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பது கதாபாத்திரத்தின் இயல்பை இன்னும் கூட்டுகிறது. காட்சிக்கு காட்சி அவர் மேல் மிகவும் பரிதாபம் ஏற்படுத்தும் வகையில் கதையின் போக்கு சென்று அதன் உச்சமாக ஆர்யாவின் கையால் கொல்லப்படும் காட்சி அமைகிறது.

இப்படத்தில் பிச்சைக்காரர்கள் வேடத்தில் உடல் மற்றும் மன ஊனமுற்ற உண்மையான பிச்சைக்காரர்களையே இயக்குநர் நடிக்க வைத்திருக்கிறார். ஒரு அமெச்சூர் நடிகரை விட இத்தகையவர்களை நடிக்க வைப்பது எத்தனை சிரமமென அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். கடவுளர்கள் வேடமணிந்த அவலட்சண முகங்கள், தங்களுக்கு ஆபத்து வரும் பொழுது கடவுள் வேடமணிந்தவர்கள் தங்களை காத்துக்கொள்ளவே திக்கற்ற நிற்பது, கொடூர வில்லனை பழுத்த ஆத்திகவாதி போல் திருநீறு அணிந்து காண்பிப்பது, கோவிலில் பாடும் குழாய் ரேடியோவில் ரஹீம் என்ற பெயர் போன்றவற்றின் மூலம் இயக்குநர் பார்வையாளனுக்கு உணர்த்த நினைப்பது ஏராளம், ஏராளம். வடிவேலுவிடம் ஒசாமா பின்லேடனின் முகவரி கேட்டு நகைச்சுவை லூட்டி அடித்த நடிகர் மிகவும் கனமான முருகன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இனி இவர் நகைச்சுவையாக நடித்தால் எடுபடுமா என்பது சந்தேகம். அந்த அளவுக்கு நடிப்பில் கனம் அதிகம். அவர் தொழில் நேரத்தில் பூஜாவை கட்டாயமாக கடத்தி போவதும், ஓய்வு நேரத்தில் மது அருந்திய மயக்கத்தில் பிரியாணி கொடுத்து தங்கச்சி என்று கொஞ்சுவதும் இயல்பான நடிப்பு.

அம்மாடி...! எங்கேயிருந்து பிடித்தார்கள் இந்த வில்லனை..? வசனம், உடல் மொழி இரண்டாலும் அசத்தலாக நடித்து நம் வெறுப்பை கொள்ளையடிக்கிறார். சினிமாவுக்கு சற்றும் பொருந்தாத ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான தோற்றம் அவருடையது. தான் வைத்து சம்பாதிக்கும் பிச்சைக்காரர்களை கூட உருப்படி என்று அழைக்கும் பாங்கு இந்த தொழிலுக்குள் இருக்கும் பயங்கர நிழல் உலகத்தை அச்சத்துடன் பார்க்க வைக்கிறது. யாருக்கும் பயப்படாத, தன் தொழில் ஒன்றையே குறியாக கொண்ட மிக கொடூரமான வில்லன் பாத்திரம் அது. இவரின் தோற்றமே கொடூரமாக இருக்கிறதே என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர் மேல் மேலும் கொடூரம் சேர்க்கும் வகையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் கொடூரத்தின் உச்சம்..!! வில்லனின் இருப்பிடமாக காட்டப்படும் அந்த பாதாள குகை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலாம். நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

இந்தப்படத்தில் இசை மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா காட்சிகளை தன் பின்னணி இசையால் படம் முழுதும் தூக்கிப்பிடிக்கிறார். காட்சியில் தெரியும் அருவெருப்பு, ஆச்சரியம், அதிர்ச்சியை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் பின்னணி இசையே தெரிவித்து விடுகிறது. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதில் பிச்சைப்பாத்திரம் என்ற பாடல் மெலடி ரகம். ஆனால் காட்சிகள் அதன் சுகானுபவத்தை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை..! வசனம் ஜெயமோகன். எல்லா வகைகளிலும் விமர்சனங்களுக்கு பெயர் போனவர் இவர். தீவிர இந்துத்வாவாதியாக சித்தரிக்கப்படும் இவரின் வசனங்களில் கடவுளர்களின் மீதான விமர்சனமும், வெறுப்பும் முற்றிலும் முரண். அப்படிப்பட்ட முரணின் உச்சமாக கடவுளை விலைமகளின் மகனாக குறிப்பிடும் வசனத்தை சொல்லலாம். அகோரி என்ற கதாப்பாத்திரம் மூலம் பாலா சொல்ல வந்த கருத்தில் சற்றே தோல்வி தான் என்றாலும், பிச்சைக்காரர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை படம் பிடித்து காட்டியதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் பாலா..!

மூன்றாந்தர உணர்ச்சிகளின் வடிகாலாக போய்க்கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களுக்கு மத்தியில் உண்மையை உள்ளபடி கசப்பினுள் இனிப்பு கூட திணிக்காமல் கொடுக்க துணியும் பாலாவை பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழ்த்திரையுலகின் சிறந்த படங்கள் என்ற பட்டியலில் இந்த படம் இடம் பெறாமல் போனாலும் சிறந்த இயக்குநர் என்ற பட்டியலில் பாலா நிச்சயம் இடம்பெறுவார், இடம்பெற வேண்டும்..! அது தான் ஒரு உண்மையான கலைஞனுக்கு நாம் செய்யும் பெரும் கௌரவம்..!!!

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நீதித்துறை Vs காவல்துறை (கலவரக்களம் உயர்நீதி மன்றம்)

என்ன நடக்கிறது தமிழ் நாட்டில்..? நீதியை அளிக்கப்போகிறவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை அந்த வன்முறையை கைகட்டி வேடிக்கை பார்த்த அவலத்தையும் ஏற்கனவே சட்டக்கல்லூரி விவகாரத்தில் அனைவரும் அறிந்து தமிழகமே அவமானத்தில் தலைகுனிந்தது. அதன் இரணம் ஆறுவதற்குள் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் காவல்துறையும், நீதித்துறையும் நாலாந்தர ரவுடிகளைப்போல் அடித்துக்கொண்டதை கண்டு மக்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். அடிப்படையில் எங்கு தவறு..? தனி மனித ஒழுக்கத்திலா..? கற்பித்த கல்வித்துறையிலா..? அனுபவங்களை ஏற்படுத்திய சமூக அமைப்பிலா..? அரசின் சட்டதிட்டங்களிலா..? இல்லையென்றால் இவை எல்லாவற்றிலுமா..? எது எப்படியோ, ஆக மொத்தத்தில் மக்களுக்கு நீதித்துறையின் மேலும், காவல்துறையின் மேலும் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கை கரைந்து கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின்மை மக்களை பயங்கரவாதம், தீவிரவாதம் பக்கம் கொண்டு சென்றுவிடும் பெரும் அபாயம் இருக்கிறது.

நீதியும், காவலும் கை கோர்த்து ஆட்சி புரிந்தால் தான் நிம்மதி நிலைநாட்டப்படும் என்ற நிலையில் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் நின்று மல்லுக்கு நின்ற காட்சி கண்டு ஒரு மனிதனாய், தமிழனாய், இந்தியனாய் வெட்கித்தலை குனிகின்றேன். பாமர மக்கள் பண, பதவி அதிகார வர்க்கங்களால் சூழ்ச்சிக்கிரையாக்கப்படும் பொழுது முன்னின்று தடுக்க வேண்டிய நீதியாளர்களான வழக்கறிஞர்கள் ஒரு பொறுப்பற்ற, அறிவற்ற குடிமகனைப்போல் கல்வீச்சில், தாக்குதல்களில் ஈடுபட்டதும், யார் மேலோ உள்ள கோபத்தில் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அமைப்பையும், அதன் சொத்துக்களையும் சூறையாடியது கேவலத்திலும் கேவலம். அவர்கள் உண்மையிலேயே நீதியின் மேல் சிறிதளவேணும் நம்பிக்கை கொண்டவர்கள் என்றால் கருப்புடையை அணிவதற்கு முன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீதியின் இலட்சணம் இவ்வளவு என்றால் காவல் துறையோ காவாலிகளையும் மிஞ்சிவிட்டது. சமூகத்தில் கலவரம், வன்முறை ஏற்பட்டால் அதை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை வன்முறையை முன்னின்று நடத்தியது சமூக அரங்கில் தமிழகத்திற்கு ஏற்பட்ட பெரும் அவமானம். வன்முறைக்கு வன்முறை தான் தீர்வென்றால் பிறகு சட்டம் எதற்கு..? காவல் துறை, நீதித்துறை எதற்கு..? ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை வேட்டையாட அனுப்ப மக்களின் வரிப்பணத்தின் சொத்துக்கள் தான் இலக்காக வேண்டுமா..? வன்முறை எதற்கும் தீர்வாக முடியாது. இன்னும் சொல்லப்போனால் வன்முறை தான் எல்லா கலவரங்களுக்கும், அழிவிற்கும் அடிப்படையாய் அமைகிறது.

பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் இந்த கலவரத்தில் பெரும் அடி விழுந்திருக்கிறது. இவன் தான் குற்றவாளி என்று சொல்ல முடியாத அளவுக்கு சீருடை அணிந்த காவலர்கள்(?!!) தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். மக்களுக்காக தன் இன்னுயிரை நீத்த பெருமை மிக்க அதிகாரிகளும் இருந்த, இருக்கும் காவல் துறையில் இது போன்றவர்களால் அந்த துறையின் மதிப்பே அழிகிறது. போகிற போக்கில் எதிர்ப்படுபவர்களையும், வாகனங்களையும் மிருகத்தனமாய் சேதப்படுத்தும் காவலர்கள் அவர்களால் சேதப்பட்டது மனிதர்களோ, வாகனங்களோ இல்லை, தமிழகத்தின் மானம் தான் என்பதை அறிவார்களா..? இவர்களால் ஏற்பட்ட தலைகுனிவை காவல் துறை என்ன செய்து நிமிர்த்த போகிறது..??

சரி, இந்த கலவரம் அடிப்படையில் எதற்காக என்று அறிந்தோமானால் அதை விட கேவலம் வேறு ஏதுமில்லை. தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காய்வதை மட்டுமே காலங்காலமாய் செய்து வரும் சுப்பிரமணிய சாமி என்ற உப்புமா அரசியல்வா(வியா)தியால் தான் இத்தனை கலவரம், அவமானம், நாசம் எல்லாம். மக்கள் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லாத இந்த அரைவேக்காட்டை கண்டித்து வழக்கறிஞர்கள் அழுகிய முட்டையால் தாக்கப்போக (அன்று முட்டைகள் வீணாய் போனது என்பது என் கருத்து) அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய காவல் துறையினர் வந்ததால் ஏற்பட்ட பிரச்சினை தான் இதற்கு ஆணிவேர். ஜனநாயகத்தில் எதிர்ப்பு, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை புதிதல்ல. ஆனால் அவற்றுக்கு பெருமைப்படும் வகையிலான காரணம் ஒன்றேனும் அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் இந்த கலவரத்திற்கு அடிப்படையாக வெறும் இனவாத, மதவாத அரசியல் செய்து பிழைத்து வரும் அற்ப சு.சாமிக்காக என்பது பெருத்த அவமானம். இந்தியாவின் தெளிவு, நேர்மையற்ற அரசியலமைப்புச்சட்டம், சுயநல அரசியல் வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள், ஜாதி, மதம், இன வேற்றுமைகளால் சிதறிக்கிடக்கும் குடிமக்கள் உள்ளிட்ட அனைவருமே நடந்த இந்த கரும்புள்ளிக்கு காரணங்கள்..!!!!

திங்கள், 14 ஜூலை, 2008

படிக்கப்போறேன்..!

கல்லு ரோட்டுல பஸ்ஸு
காத்து போல பறக்குது!
அடம் புடிக்கும் மனசு
ஆத்தா மடியில் கிடக்குது.!!

படிச்சி கலெக்டராவணும்னு
பாடுபடும் அப்பனோட ஆசை!
மடிப்பு கலையாத ட்ரெஸ்ஸோட
மகராசி என் ஆத்தாவுக்கு நான்
மனம் நெறஞ்சி வாழணுமாம்..!!

அப்பன், ஆத்தா ஆசை நிறைவேத்த்
அத்தை வீட்டில் தங்கி படிக்க
அழுதுகிட்டே போறேன்..!
விலா ஒடிக்கும் வீட்டுவேலை,
திணறடிக்கும் தீப்பெட்டி வேலை
எல்லாத்துக்கும் இனி விடுதலை..!!

பசிச்சாக்கா பாலும், பழமும்
பட்டணத்தில் கிடைக்கலாம்..!
அச்சப்பட்டு அழுவும் போது
உச்சிமோந்து வாரியணைக்க
ஆத்தா அன்பு அங்க இருக்குமா?

திங்கள், 7 ஜூலை, 2008

இதயமென்பது இயந்திரமா? அன்பில்லமா..?

நம்பிக்கையும், பகுத்தறிவும் சரிவரக் கலந்தது தான் உலக வாழ்க்கை. "இவர் தான் தன் தந்தையா..?" என்று யாரும் நிரூபணம் செய்ய விரும்புவதில்லை. நாம் அறிந்ததை நம்பிவிடுகிறோம். "இது என்ன நோய்..?" என்று அறியாது அதற்கான மருந்தை நாம் உட்கொள்வதில்லை. அதனை அறிந்த பிறகு தான் அதை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்குகிறோம். ஆக, நம்பிக்கை, பகுத்தறிவு ஆகிய இரண்டும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. ஆனால், விசித்திரம் என்னவென்றால் இந்த இரண்டும் இருவேறு துருவங்கள்.! நம்பிக்கை இருக்கும் இடத்தில் பகுத்தறிவு தோற்கும், பகுத்தறிவு இருக்கும் இடத்தில் நம்பிக்கை தோற்கும். அதே போல் தான் இதயமும்.!! விஞ்ஞானம் என்ற பகுத்தறிவு கொண்டு பார்த்தால் இதயம் என்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் ஓர் இயந்திரம். நம் நம்பிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் அன்பை இறைக்கும் கடவுளின் உறைவிடம். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இரண்டுமே உண்மை தான். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல் நம்பிக்கை, பகுத்தறிவு இரண்டும் கலந்தது தானே வாழ்க்கை..?

இதயம் ஒரு விசித்திர உறுப்பு.! சிந்தனை, செயல் உள்ளிட்ட அனைத்திற்கும் முழு முதற்பொறுப்பான மூளைக்கு கிடைக்க வேண்டிய பெயரை அதற்கு சம்பந்தமேயில்லாமல் இதயம் பெற்றிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டிருக்கும் என நான் சிந்தித்த வேளையில் எனக்கு கிடைத்த சில பதில்கள். மனிதர்களின் மேன்மையான குணம் அன்பு செலுத்துதல். அதை செய்வதில் தொடர்புடைய உறுப்பு மூளை. அந்த மூளை இருப்பதோ உச்சியில். எல்லாவற்றுக்கும் "நான் தான் காரணம் என்பதால் தான் நான் அனைத்தையும் விட உயரமான இடத்தில் இருக்கிறேன்" என்ற கர்வம் மூளைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையால் மனித சமூகம் அன்பின் அடையாளமாய் மூளையை சொல்லாமல் புறக்கணித்திருக்கலாம். காரணம், அன்பிருக்கும் இடத்தில் கர்வத்திற்கு வேலையில்லை..!!

சரி.. அப்படியென்றால்.. அன்பை சொல்ல இதயத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்..? உடம்பில் வேறு பல உறுப்புக்கள் இருக்கின்றனவே..? அதற்கும் காரணம் இருக்கிறது. இதயம் இருக்கும் இடம் உடம்பின் மையப்பகுதி. அன்பைக்கொண்டு நடுநிலையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல், அன்பு எத்தனை பெரிய தீயவனையும் நல்லவனாய் மாற்றும் சக்தியுடையது. அதே போல் தான் இதயமும் கெட்ட இரத்தத்தை சுத்திகரித்து, நல்ல இரத்தமாக மாற்றுகிறது.!! அதுவும் சரி தான்..அப்படியென்றால் இதயம் உடம்பின் மையத்தில் இல்லாமல் ஏன் இடது புறம் இருக்கிறது.? பொதுவாகவே நம் உடலில் வலது பக்க உறுப்புக்களுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. கை குலுக்குவது, சாப்பிடுவது தொடங்கி காலை எடுத்து வைத்து உள் நுழைவது வரை வலது பக்க உறுப்புகளுக்கு பெரும் முக்கியத்துவம். ஆனால், அன்பிற்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல.. அதனால் தான் யாரும் சீந்த நினைக்காத இடது புறத்தில் அன்பை உற்பத்தி செய்யும் இதயம் அமைந்துள்ளது.!!

பொதுவாக உண்மையை சொல்ல வைக்க தலையில் கை வைத்து சொன்னால் அது சத்தியம். ஆனால், இதயத்தின் மேல் கை வைத்து சொன்னால் அது மனசாட்சி..! சத்தியத்தை நிறைய மீறுகிறார்கள். ஆனால், மனசாட்சியை மீற நிறைய பேருக்கு துணிவிருக்காது. அப்படி மீறுபவர்கள் குற்றவுணர்ச்சியால் பெரும் சித்ரவதைக்குள்ளாவர்கள். மனசாட்சிக்கு பயந்து திருந்துபவர்கள் மகான் ஆகும் வாய்ப்பு கூட உண்டு. இன்றைய காலகட்டத்தில் உலக வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து உலகத்தை அமைதிப்பூங்காவாக்கும் அருமருந்து அன்பு மட்டும் தான்.!

கடவுள் அன்பின் வடிவம் என்பார்கள். அந்த அன்பை உற்பத்தி செய்யுமிடம் இதயம். ஆக, என்னை பொருத்தவரை இதயம் ஒரு கோவில்..!!

ஞாயிறு, 6 ஜூலை, 2008

தமிழர்களின் மொழிப்பற்றும், புரிதலும்..!

இரு தமிழக தமிலர்கள்(!) சந்தித்துக்கொள்ளும் பொழுது டமிங்கிலத்தில் பேசிக்கொள்வதை பல முறை கண்டிருக்கிறேன். ஆனால், இரு ஈழத்தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும் பொழுது இந்த அவலம் பெரும்பாலும் நிகழ்வதில்லை. இன்றைய காலகட்டம் வரை தமிழை இணையத்தில் வளர்த்ததில் ஈழத்தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. என்னுடைய தமிழார்வம் அதிகரித்ததற்கு இலங்கைத்தமிழர்களும் ஒரு காரணம் என்று சொல்வேன். அந்த அளவுக்கு அவர்கள் மொழிக்கு அத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழ் என்பது அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது.

அடுத்து, தமிழ் மொழி பயன்பாடு என்பதில் நாட்டுக்கு நாடு, மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. நம் பிள்ளை என்பதால் நம் பிள்ளையின் தவறுகளை ஒத்துக்கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நம் மொழியில் உள்ள குறைபாடுகளும், அதன் திருத்துவதில் அல்லது கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டாத தமிழர்களும். அந்த வகையில் தமிழை சரியாக பேசுவதில், மொழி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் முன்னால் நிற்கிறார்கள். ஆனால், இங்கே வந்திருக்கும் உச்சரிப்பு பிரச்சினை வேறு விதமானது. தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் பிற மொழியை குறிப்பாக ஆங்கில மொழியை எந்த வகையினர் சரியாக பேசுகிறார்கள் என்பது. பொதுவாக மிகச்சரியாக பேசுதல் என்பது பெரும்பாலும் அந்நிய மொழிக்கு பொருந்துவதில்லை.

ஒரு மொழியை அம்மொழியை தாய் மொழியாக கொண்டவனைக்காட்டிலும் மற்ற மொழிக்காரன் அத்தனை சரியாக பேசுவது எளிதான காரியமல்ல. அதனால் இங்கே இந்த வாக்குவாதம் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. காரணம், ஆழ்ந்து பார்த்தால் தமிழக, இலங்கை உள்ளிட்ட அனைத்து தமிழர்களிடமும் ஆங்கிலத்தை பிரயோகிப்பதில் பலவிதமான முரண்பாடுகள் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்தை உபயோகிக்கும் மற்ற மொழிக்காரர்களுக்கும் பொருந்தும். எனக்கு தெரிந்து அரேபியர்களுக்கு P உச்சரிப்பு ஆங்கிலத்தில் வருவதில்லை (B மட்டும் தான் உச்சரிப்பார்கள்). துருக்கியர்களுக்கு th(த்) என்பதை ஸ் என்று உச்சரிப்பார்கள். இப்படி நிறைய சொல்லலாம். Bottle என்ற வார்த்தையை அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் உச்சரிப்பதை சரியாக தமிழில் கொண்டு வந்து எழுதி விடமுடியும் என்றோ, அதை படித்து சரியான உச்சரிப்பை கொண்டு வந்துவிட முடியும் என்றோ நான் நம்பவில்லை.

ஒரு மொழியை சரியாக கற்க அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களை உற்று நோக்க வேண்டும். பாட்டில், போத்தல் என்பது தமிழில் அவரவர் பகுதி உச்சரிப்பிற்கேற்ப நாமாக உண்டாக்கியவையே தவிர அதற்கான ஒழுங்கான உச்சரிப்பை அந்த மொழியில், அவர்கள் உச்சரிப்பில் சொல்லும் போது மட்டுமே சரி..!! நாம் பாட்டில் அல்லது போத்தல் என்பதற்கு பதிலாக நம் மொழியில் குப்பி அல்லது குடுவை என்று சொல்வது சிறப்பு. சரி.. இப்படி எல்லாவற்றையும் நாம் பேசலாமா..? முடியாது... காரணம் நிறைய பொருட்களுக்கு, செயல்களுக்கு இன்று வரை சரியான தமிழ்ப்பதம் இல்லை. அல்லது அப்படி தமிழ்ப்பதம் இருந்து சொன்னால் புரிவதில் குழப்பம் தான் பெரும்பாலும் ஏற்படும். மொழியை வளர்க்கிறேன் என்ற பெயரில் சிலர் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். மொழியை வளர்ப்பதை விட அந்த மொழியால் நமக்குள் புரிவதில் குழப்பம் ஏற்படக்கூடாது அவசியம் என நான் நினைக்கின்றேன்.

இன்று வரை வழக்கில் மிதிவண்டி, பேருந்து என சொல்வதில்லை. சைக்கிள், பஸ் தான். ஆங்கிலம் அளவுக்கு தமிழ் அத்தனை மொழி வளம் இல்லாததும், கற்க சிரமமானதும், அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளதும் தமிழின் பெரும் பலவீனம். இந்த பலவீனம் எதுவும் இல்லாதது ஆங்கிலத்தின் பெரும் பலம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைப்பவற்றிற்கான புதுப்புது பதங்களை உடனுக்குடன் ஆங்கிலத்தில் உண்டாக்கி அகராதியில் சேர்க்கிறார்கள். ஆனால், அதை நாம் பெரும்பாலும் செய்வதில்லை. தமிழை மட்டும் பேசி ஒரு முழுமையான புரிதலையுடைய சமுதாயத்தை நாம் காண முடியாது என்பதை உறுதி செய்ய இரு வேறு தமிழர்கள் ஒரே பொருளின் பெயரை இரு வகையில் உச்சரித்து இருவரும் "தான்" சொல்வது தான் சரி என்பதை கொண்டு புரிந்து கொள்ளலாம்..!! ஆனால், உண்மை இருவர் சொல்வதும் தவறு என்பது என் கருத்து.

இது போன்ற குழப்பத்தை மொழி தீர்க்க முடியாது. ஒருத்தொருக்கொருத்தர் இடையேயான புரிதலும், அறிதலும் மட்டுமே தீர்க்கும்..!!

Related Posts with Thumbnails