நேரம்:

புதன், 16 ஏப்ரல், 2008

ஒரு கிளியின் கிலி கதை..!

எனக்கு பறவை, செல்லப்பிராணி, செடி வளர்க்கிறதுன்னா அவ்ளோ இஷ்டம்..! செடி வளர்க்கிறேன்னு வளர்த்து, வளர்த்து எங்கப்பா காசை காலியாக்குனதும், பறவை, பிராணி வளர்க்கிறேன்னு அதை அற்ப ஆயிசாக்கி சாவடிச்சதும் தான் மிச்சம். ஆனாலும் (கொல்றதுல) ஆர்வம் மட்டும் குறையவே குறையலை. ஒரு தடவை சின்னப்பிள்ளையா இருக்கும் போது பட்டுக்கோட்டையில பிச்சையெடுத்திட்டிருந்த யானையை பார்த்துட்டு அதை வாங்கித்தரச்சொல்லி அம்மாக்கிட்ட அடம்பிடிச்சத இப்ப நினைச்சாலும் சிரிப்பு, சிரிப்பா வருது..! இது சம்பந்தமா என் கைவசம் நிறைய கதை இருக்கு. ஆனா, அதை எல்லாத்தையும் இங்க போட்டா மேனகா காந்திக்கு மேட்டர் போய் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்துல என்னை உள்ளை தூக்கிப்போட நானே எடுத்துக்கொடுத்த மாதிரி ஆயிடும். அதனால ஒரே ஒரு மேட்டர் மட்டும்..!

ஒரு தடவை என்னோட ஏழு மாமாவுல ஒருத்தர் கிளிக்குஞ்சு ஒண்ணை கொண்டு வந்தார். உடம்பில கிளிக்கே உரிய இறகெல்லாம் முளைக்காம உரிச்ச கோழி மாதிரி இருந்த அதை பார்த்தா எனக்கு பாவமா இருந்துச்சி. ஆனாலும், அதைப்பார்த்ததும் எனக்கு அவ்ளோ சந்தோஷம். அதை கையில வாங்கின உடனேயே அது நல்லா புசு, புசுன்னு பச்சை இறகெல்லாம் வளர்ந்து அழகாகி, நான் சொல்றதெல்லாம் செய்ற மாதிரியும், நான் பேசுறதையெல்லாம் பேசிக்கேட்கிற மாதிரியும், எங்க கிராமத்து தாத்தா வீட்டுக்கு கொண்டு போய் தாத்தாக்கிட்ட லெட்டர் கொடுத்திட்டு வர்ற மாதிரியும் கற்பனையில் கனவு காண ஆரம்பிச்சிட்டேன். அந்த கிளிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செஞ்சி உண்ண, உறங்க குறையில்லாம பார்த்துக்கிட்டேன். கொஞ்ச நாள்ல மொட்டிலேர்ந்து பூ மலர்ற மாதிரி சொரசொரன்னு இருந்த அது தோலிலேர்ந்து அசத்தல் பச்சைல இறகெல்லாம் கொஞ்சம், கொஞ்சமா முளைக்க ஆரம்பிச்சது.

நம்ம ஆள் கொஞ்சம், கொஞ்சமா க்ளாமர் ஆகிட்டிருந்தார். ஆனா, அன்புத்தொல்லை எப்பவும் ஆபத்து தானே..? அதுக்கு எவ்வளவு வேணுமோ அவ்ளோ தானே சாப்பிடும்.? நான் அதை தான் ஒரு அநாதைங்கிற நினைப்பில், கழிவிரக்கத்துல ஒழுங்கா சாப்பிடாம இருக்குதோன்னு கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சேன். எந்த அளவுக்குன்னா, கிளியோட அலகை விரிச்சி உள்ளே உணவை தள்ளிவிடுற அளவுக்கு..! கொஞ்ச நாள் கழிச்சி அது கொஞ்சம், கொஞ்சமா பலவீனமா போற மாதிரி தெரிஞ்சது. ஏன்னா எப்ப பார்த்தாலும் உறக்கமா இருக்கிறது, நடையில் தள்ளாட்டம் இப்படி..! நான் அதை உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டுன்னு நினைச்சிட்டேன். ஆனா, ஒரு குண்டன் தான் அதை கொஞ்சம், கொஞ்சமா அன்புத்தொல்லையால கொன்னுக்கிட்டு இருக்கான்னு எனக்கு அப்ப புரியலை.

ஒரு நாள் பாதுகாப்பா என் அறையில் வச்சிட்டு ஸ்கூல் போய்ட்டு திரும்பி வந்து பார்த்தா என் மவராசா உடல் ஊதி மரிச்சி போய் கிடந்தார். மனம் அப்படியே நொறுங்கி போச்சு..! ஒரு நாள் முழுசும் அழுதேன். அதை கொண்டு போய் ராணுவ மரியாதையோட எங்க வீட்டு பின்புறத்துல அடக்கம் பண்ணி, தினமும் சாயந்தரம் அந்த இடத்துல போய் அஞ்சலி செலுத்துற மாதிரி அரைமணி நேரம் நின்னுட்டு வருவேன். இப்படி பல கதை என்கிட்ட இருக்குங்க. !

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails